Thursday, February 16, 2006

ஈரான் வாக்களிப்பு ஏன் சரி ஏன் தவறு

ஈரான் விஷயத்தை ஐ நாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்புவது குறித்த வாக்கெடுப்பில் ஆதரவாக இந்தியா வாக்களித்திருப்பது குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாரதீய ஜனதா கட்சியும் மத்திய அரசு அமெரிக்க வற்புறுத்தலுக்கு பணிந்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளன, நாடாளுமன்றத்தில் இந்த விஷயம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரியுள்ளன. இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டு வருகிறது.
கொஞ்ச நாட்களாக கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு ஆளும் அரசை கண்மூடித்தனமாக எதிர்ப்பதில் கவனம் செலுத்திய பாரதிய ஜனதா கட்சியும் தற்போது ஆர் எஸ் எஸ்ஸின் கண்டிப்பிற்கு பிறகு திடீர் ஞானோதயமாய் இந்த விஷயத்தில் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

எந்த சூழலில் இந்தியா ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும், அமெரிக்க எதிர்ப்பு என்பதை தவிரவும் இந்த விஷயத்தில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து கொஞ்சம் ஆராயலாம்.

ஈரான் அதிபர் மீது ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு இருந்தது நினைவிருக்கலாம். 1979 நவம்பர் 4ம் தேதி அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்தவர்கள் பணய கைதிகளாக சுமார் 444 நாட்கள் வைக்கப்படிருந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் குழுவின் தலைவராக இவர் இருந்ததாக பணய கைதிகள் சிலர் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். அந்த விவகாரம் உண்மையோ இல்லையோ ஆனால் அவர் ஒரு தீவிரமான செயல்பாட்டு சித்தாந்தம் கொண்டவர் என்பது அடுத்த சில மாதங்களிலேயே நிரூபணமானது. யூத படுகொலை என்பது இட்டுக்கட்டப்பட்ட கற்பனை என்ற அவரது வாதம் மேற்கு நாடுகளில் அதிர்ச்சி அலையை உண்டு பண்ணியது. மேற்கு ஆசிய அமைதி நடவடிக்கைகளுக்கும் அச்சத்தை தோற்றுவித்தது. இப்படி ஒரு சிந்தனையாளர் தான் திடீரென்று அணுசக்தி அணுஆயுதம் என்று பேசினால் உலக அமைதி கருதும் யாருக்கும் ஒரு பயத்தை உருவாவது தவிர்க்க முடியாதது.

இந்த விஷயத்தில் அமெரிக்காவிற்கு எதிர்ப்பு தோன்ற காரணம் அமெரிக்காவுக்கு தனக்கு பிடிக்காத நாடுகள் மீது நொண்டி சாக்கு சொல்லி தாக்குதல் நடத்துவது இயல்பான வழக்கம் என்பதால் இதுவும் அதே போன்றதொரு உள் நோக்கத்துடன் தான் செய்யப்படுகிறது என்ற எண்ணம். எப்படி புலி வருகிறது புலி வருகிறது என்று சும்மா சும்மா பயமுறுத்துபவன் உண்மையில் புலி வரும் போது சொன்னால் கூட நம்ப மாட்டார்களோ அப்படி ஆகி விட்டது அமெரிக்க நிலைமை.நம்ம ஊர் ஆட்களை பொறுத்த வரை அமெரிக்காவை எப்பொழுதுமே சந்தேக கண் கொண்டு தான் பார்ப்பார்கள். இந்த விஷயத்திலும் அதே போன்ற கண்ணோட்டத்திலேயே இந்த பிரச்சினையை பார்க்கிறார்கள். ஆனால் ஒரு தீவிர சிந்தனையாளரின் கையில் அதுவும் அவர் உக்கிரமான மன நிலையில் உள்ள போது அணு ஆயுதம் போனால் என்ன ஆகும் என்று சிந்திக்க தவறி விடுகிறார்கள்.

அவர்களது அடுத்த குற்றச்சாட்டு இந்தியா நடு நிலையில் இருந்து தவறிவிட்டது என்பது. அதாவது இவர்களை பொறுத்த வரை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் இந்திய நடு நிலைமை காப்பாற்றப்பட்டிருக்கும் என்பது இவர்களின் வாதம். இவர்களே இந்தியா வல்லரசாக வேண்டும் என்று முழக்கமிடுவார்கள். முக்கிய பிரச்சனைகளில் கூட முடிவு எடுக்க முடியாதவன் எப்படி வல்லவனாக முடியும். நடு நிலை காப்பாற்றுகிறேன் என்று வேஷம் போட்டால் இந்தியாவின் வலிமை வளர்ச்சி பெற்றுள்ளதை என்று தான் உணர்த்த முடியும். இந்த உணர்த்தும் நோக்கில் தான் சுனாமி பேரழிவின் போது அன்னிய நிதி உதவியை இந்தியா மறுத்தது என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

அதேபோல் இப்போது ஈரானுக்கு எதிராக பெரிய நடவடிக்கை ஒன்றும் எடுக்கப்பட்டு விடவில்லை. இந்த பிரச்சினை பாதுகாப்பு கவுன்சிலின் முன் வைக்கப்படுவதற்கு தான் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. இது ஈரான் மீது அமெரிக்க தாக்குதலுக்கு முன்னேற்பாடு என்று கருதுபவர்கள் இப்போது சூழல் மாறிவிட்டதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஈராக் மீது தாக்குதல் நடத்திய விஷயத்திலேயே வெளியேயும் வர முடியாமல் உள்ளேயும் இருக்க முடியாமல் சூடுபட்ட பூனையாக முழிக்கிறது அமெரிக்கா. அதனால் தான் ஈரான் பிரச்சினையில் உலக நாடுகளின் துணையை தேடி அலைபாய்கிறது.

ஈரான் விஷயத்தில் உலக நாடுகளின் போக்கினை இரண்டு முக்கிய விஷயங்கள் தீர்மானிக்கிறது. ஒன்று எண்ணெய் விவகாரம், மற்றொன்று இஸ்லாமிய நாடு அமெரிக்காவினால் நிர்ப்பந்திக்கப்படுகிறது என்ற விவகாரம். இரண்டுமே விவகாரமான விவகாரங்கள் தான். இந்தியா உள்ளிட்ட நடு நிலை நாடுகள் எண்ணெய் விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை மறுக்க முடியாது. ஏனென்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்க கூடிய முக்கியமான அம்சமாக கச்சா எண்ணெய் மாறி விட்டது. ஆனால் அதற்காக உலக அமைதியை பணயமாக வைக்க முடியுமா?
சரி அப்படியென்றால் இந்த வாக்களிப்பில் என்ன தவறிருக்கிறது என்கிறீர்களா? தவறு ஒன்றுமில்லை. ஆனால் நாம் மேலே சொன்ன எண்ணங்களுடன் தான் இந்த வாக்களிப்பு செய்யப்பட்டிருக்கிறதா அல்லது அமெரிக்க நிர்ப்பந்தத்திற்கு இந்தியா அடி பணிய துவங்கியிருக்கிறது அல்லது அமெரிக்காவை நோக்கிய இளகிய மனம் காட்டும் மன் மோகன் சிங் அரசின் குருட்டுத்தனமான நடவடிக்கை என்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூற்றினை போல நடந்தேறியிருக்கிறதா என்பது தான் இப்போது கேள்வி.

ஏனென்றால் அமெரிக்கா இப்போது பலவீனமடைந்து கொண்டே வருவது கண்கூடாகி விட்ட சூழ் நிலையில் துணைக்கு ஆசிய நாடுகளை தேட வேண்டிய சூழல் உருவாகி விட்டது. ஏனென்றால் இப்போது இங்கிலாந்து நாட்டிலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு துணை போக கூடாது என்று எதிர்ப்பு குரல் பலமாக கேட்கின்றது. அதனால் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள், இந்தியா என்று முக்கிய உலக சக்திகளை தன்னுடன் சேர்த்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் அமெரிக்காவின் தலைவலி. அதற்கு இந்தியா ஊறுகாயாக முடியாது என்பதை மன்மோகன்சிங் அரசு புரிந்து கொண்டிருந்தால் சரி. ஏனென்றால் சீனா தான் அதிகம் தலையிட விரும்பாமல் ரஷ்யா சமாதான முயற்சிக்கு தான் ஆதரவளிப்பதாக கூறி ஒதுங்குகிறது. ரஷ்யாவும் அமெரிக்க ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் தன் நலங்களை கருத்தில் கொண்டும் யுரேனியத்தை தான் வளப்படுத்தி தருவதாக கூறிவருகிறது. இது போன்றதொரு சூழலில் தான் இந்தியாவின் வாக்களிப்பினை பார்க்க வேண்டுமே தவிர அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒரே ஒரு கண்ணாடியை கொண்டு அத்தனை காட்சிகளையும் பார்க்கத் துவங்கினால் அமெரிக்காவினால் அதிகம் பாதிப்படைந்தது நாமாக தான் இருப்போம்.

இந்த விஷயத்தில் பாராளுமன்ற விவாதத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரியுள்ளன. அதன் போது இந்த கேள்விகளுக்கான விடைகள் தெரிய வரும். அப்போது அந்த விவாதம் இந்தியா மட்டுமன்றி உலக நாடுகள் அத்தனையும் உற்று நோக்கும் அதி முக்கிய சிந்தனை விவாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

3 comments:

உலகன் said...

ஈராக் மீது தாக்குதல் நடத்திய விஷயத்திலேயே வெளியேயும் வர முடியாமல் உள்ளேயும் இருக்க முடியாமல் சூடுபட்ட பூனையாக முழிக்கிறது அமெரிக்கா.

இது ஒரு தவறான கருத்து என்று சாம்ஸ்கியின் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட கருத்து கீழே.

Illusion #1: With the U.S. military bogged down in Iraq, the Pentagon is in no position to take on Iran.

But what’s on the horizon is not an invasion -- it’s a major air assault, which the American military can easily inflict on Iranian sites. (And if the task falls to the Israeli military, it is also well-equipped to bomb Iran.)

இதன் முழுமையான கட்டுரை இங்கே

http://www.zmag.org/content/showarticle.cfm?itemid=9694

Boston Bala said...

oh... can US do a Libya in Iran? If not whether Israel can assimilate a nuclear power on its border?

Amar said...

First off, I dont think the Iranians are anywhere close to making a nuclear weapon.

The centrifuges for enriching Uranium were obtained from Khan Research Labs, Pakistan.
(some of them have been confiscated by US from Libya)

Now, please recall that the Chinese warhead design the Pakistanis tests in Chagai'98 FAILED because their Uranium enrichment was not proper.

Its a shame that people in India want to support a country that obtained Nuclear weapons from our enemy through clandestine means even while their enjoyed good relations with us.