Tuesday, December 16, 2008

பொருளாதார நெருக்கடியும் பழைமைவாத அரசியல்வாதிகளும்

எனவே இது தான் சூழ்நிலை: பொருளாதாரம் பல தசாப்தங்கள் கண்டிராத மோசமானதொரு சரிவை எதிர்கொண்டிருக்கிறது. பொருளாதார தாழ்வு நிலையை எதிர்கொள்வதற்கான வழக்கமான பதிலிறுப்புகளான வட்டி விகிதங்களைக் குறைப்பது போன்றவை எல்லாம் பலனளிப்பதாக இல்லை. பெரிய அளவிலான அரசாங்க உதவி என்பது தான் பொருளாதார பல்டியைத் தடுப்பதற்கான ஒரே வழியாகத் தோன்றுகிறது. அதிலும் ஒரு பிரச்சினை என்னவென்றால், வழக்கமான பழைமைவாத அரசியல்வாதிகள் வழக்கொழிந்த தங்களது சித்தாந்தங்களுடன் நடவடிக்கையின் வழியில் குறுக்கே நிற்கிறார்கள்.

இப்படி தொடங்குகிறது நோபல் வென்ற பால் கிரக்மேனின் நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை. ஜேர்மனி ஒரு நாடு பொருளாதார மீட்பு தொகுப்பில் நம்பிக்கை இல்லாமல் பேசுவதும் நடந்து கொள்வதும் எப்படி ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்கா அல்லது உலகில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற சில நாடுகளின் இந்த 'ஊக்கத்தொகுப்பு மூலம் மீட்சி' முயற்சியையும் அது எப்படி பலனில்லாது ஆக்கும் என்பதை விளக்குவதற்காக இப்படி ஆரம்பிக்கிறார் அவர்.

http://www.deccanchronicle.com/Columnists/Columnists.asp#Time%20is%20running%20out%20for%20Europe

செய்தித்தாளின் இன்னொரு பக்கத்தில் ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிப்பதற்காக இந்திய வங்கிகள் வீட்டுக் கடன் வட்டியை 8.5 சதவீதம் முதல் 9 சதவீதத்திற்குள் என்பதாக குறைத்திருப்பதாக செய்தி.

வெறும் மேம்போக்கான ஒப்பீட்டை வைத்து இதை ஒரு குறையாகக் காணும் அளவுக்கு நாம் பொருளாதார வல்லுநர் இல்லை தான். ஆனாலும் நாம் வேண்டுவதெல்லாம், ஐயா அதிகாரத்தில் இருக்கும் தொரைகளே, லோகத்தில் நாலு இடத்தில் நடப்பதைப் பார்த்து, கோடிக்கணக்கான சாதாரண மக்களின் நலன்களை மனதில் கொண்டு முடிவுகளை எடுங்கள். இரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா சொல்வதைப் போல, "டாக்டர், என்னை வைச்சு தான் நீங்க தொழில் கத்துக்கறீங்க போலிருக்கு" என்பதாக, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பணயம் வைத்து பொருளாதார அல்லது அரசியல் மேதைகளான உங்களின் அறிவை அல்லது நிர்வாக திறனை புலப்படுத்தும் முனைப்பில் இறங்கி விடாதீர்கள் என்பது தான். 'டாக்டர்' சிங்குக்கும் 'டாக்டர்' சோனியாவுக்கும் மற்றும் நம் பிற பழமைவாத அரசியல்வாதிகளுக்கும் கேட்குமா?

Wednesday, November 26, 2008

சம்பளம் குறைக்கும் சிங்கப்பூர் பிரதமரும் சபாரி கார் கேட்கும் நம்மூர் எம்எல்ஏக்களும்

"சிங்கப்பூர்" நம்மூர் அரசியல்வாதிகள் நமது மக்களை ஏமாற்றுவதற்கு எப்போதுமே உச்சரிக்கும் ஒரு நாடு. மதுரையில் எம்பி தேர்தலில் நின்ற சுப்பிரமணியசாமி தான் வெற்றி பெற்றால் மதுரையை சிங்கப்பூராக மாற்ற வாக்குறுதியளித்ததும், ஒருவேளை அரசு கெஜட்டில் பெயர் மாற்றப் போகிறாரோ என்று பாமர வெகுஜனம் திகைத்ததும் வரலாறு.



உலகமெங்கும் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடும் சூழ்நிலையில், தொழிலாளர்களுக்கு சம்பள வெட்டும் வேலை இழப்பும் அன்றாட செய்திகளாகி வருகின்றன. நம்நாட்டு அமைச்சர்கள் எல்லாம் சம்பள வெட்டை நிலைமை உணர்ந்து சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று பணியாளர்களுக்கு உபதேசித்து வருகிறார்கள். இதே மாதிரியான ஒரு சூழ்நிலையை சிங்கப்பூர் அரசியல் நிர்வாகம் கையாளும் தன்மை இங்கு குறிப்பிடத்தக்கது.


அந்த நாட்டின் பிரதமரே தனது சம்பளத்தில் 19% வெட்டுக்கு சம்மதித்திருக்கிறார். இந்த ஆண்டு 2.46 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பளமாக பெறும் லீ ஸென் லூங் அடுத்த ஆண்டு 1.99 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே சம்பளமாகப் பெறுவார். அந்த நாட்டு அமைச்சர்களும் உயர் அரசு அதிகாரிகளும் 11 சதவீதம் முதல் 19 சதவீதம் வரையான சம்பளவெட்டினை எதிர்கொள்ள இருக்கிறார்கள். அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் இவ்வாறாக நெருக்கடியை எதிர்கொள்வதிலும் தலைமை தாங்கி செல்லும் போது, மக்கள் அவர்கள் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு இயல்பாகவே ஒரு நியாயம் பிறப்பது சரிதானே!


நமது நாட்டு 'உபதேச' அமைச்சர்களுக்கும், குறிப்பாக சட்டமன்றம் கூடிய உடனே முதலில் மைக் பிடித்து "எங்களுக்கு அம்பாஸடர் கார் வேண்டாம், ஸ்கார்பியோ அல்லது சபாரி கார் தான் வேண்டும்" என்று கோரும் நம்ம ஊர் எம்எல்ஏக்களுக்கும் சிங்கப்பூர் 'செய்தி' உறைக்குமா?

Thursday, November 20, 2008

கேலிக்குள்ளாகியிருக்கும் நிதியமைச்சரின் வேண்டுகோள்

ரியல் எஸ்டேட், வாகனத்துறை மற்றும் ஏர்லைன்ஸ் ஆகிய துறைகள் விலைக்குறைப்பு செய்ய வேண்டும் என்று நிதி அமைச்சர் சிதம்பரம் விடுத்த வேண்டுகோள் தொழில்துறையினரிடையே அதிருப்தியையும், விமர்சகர்களிடையே கேலியையும் உண்டாக்கியிருக்கிறது.

உடனடியாக எதிர்வினையாற்றிய ரியல் எஸ்டேட் துறை நிறுவனமான டிஎல்எப் தலைவர், ரியல் எஸ்டேட் துறை ஏற்கனவே கடந்த ஆறு மாத காலத்தில் (சென்னையும், ஹைதராபாத்தும் தவிர்த்து பிற மெட்ரோக்கள் உள்பட அனைத்து வட இந்திய பகுதிகளிலும் இது வெளிப்படையாக காணப்படத் துவங்கியது. பங்குச் சந்தையிலும் பிரதிபலித்தது) வீழ்ச்சியுறத் துவங்கி பரிதாபமான நிலையில் இருக்கின்ற சூழலில் இனி எங்கு குறைப்பது என்றார். மாறாக அரசாங்கம் தான் கடனுதவி மூலம் பணப்புழக்கத்தை அதிகரித்து வாங்கும் தேவையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்றார்.

வாகனத் துறைக்கு பஜாஜ் தலைவர் இதே போன்றதொரு கருத்தை பிரதிபலித்தார். வாகன விற்பனை ஏற்கனவே சரிவைச் சந்தித்து இருக்கும் வேளையில், விலையைக் குறைத்தால் இன்னும் அல்லவா நஷ்டம் அதிகரிக்கும் என்றார் அவர். ஒருவேளை எல்லா நிறுவனங்களும் ஒருசேர விலைகுறைப்புக்கு ஒத்துக் கொண்டால் கூட நிறுவனங்களின் சந்தைப் பங்களிப்பு நிலை இந்த வேறுபட்ட விலைகுறைப்பால் குளறுபடிக்குள்ளாகும் அல்லவா என்று மேலும் குழப்பினார் அவர்.

ஏர்லைன்ஸ் துறையில் அவர்கள் சலுகைகளை எதிர்பார்த்திருந்ததால் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் சொல்லி விடவும் கூடாது என்பது போல் விமான எரிபொருளை 'அறிவிக்கப்பட்ட பொருட்கள்' பட்டியலில் சேர்க்க அரசாங்கம் ஆலோசிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான 4 சதவீத விற்பனை வரி அவற்றின் மீது விதிக்கப்படுமாம். முன்னர் இது 21 சதவீதம் வரை இருந்ததாம். ஜெட் ஏர்வேஸ் 2000 பேரை பணிநீக்கம் செய்த சமயத்தில் அரசாங்கம் ஏற்கனவே விமான எரிபொருளில் ஏற்கனவே பல சலுகைகளை அறிவிருத்திருந்தது என்பது நினைவிருக்கலாம். அதாவது எரிபொருள் கடன் செலுத்தும் காலம் இரண்டு வாரங்களில் இருந்து 6 மாத காலமாக ஆக்கப்பட்டிருக்கிறது. 5 சதவீத கலால் வரி நீக்கப்பட்டிருக்கிறது. அதனால் விமானக் கட்டணம் கட்டாயம் குறைக்கப்படும் என்று அரசாங்கம் சொல்கிறது. நடக்க வேண்டும். இதுவாவது தேர்தல் வரை காத்திருக்காது என்று நம்புவோம்.

இன்றைய டெக்கான் கிரானிக்கிளில் நிதியமைச்சரின் வேண்டுகோள் குறித்து வந்திருக்கும் இரண்டு கார்ட்டூன்கள் இங்கே: (சிதம்பரம் ஹாலந்து பறந்து விட்டார். அதனால் அவர் இது குறித்து கவலைப் பட வேண்டியிருக்காது)





சிலபல மாதங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் தங்கள் சம்பளத்தைக் குறைத்து கொள்ள வேண்டும் என்று பேசி தொழில்துறையினரிடமும் ஊடகத்திடமும் எவ்வளவு கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார் என்பது அறிந்த விஷயம். அவரது அடியற்றி இப்போது சிதம்பரம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆக இது

"அண்ணன் காட்டிய வழியம்மா,
'அன்பால்' விளைந்த பழியம்மா".

Friday, November 14, 2008

வெள்ளிக் கரண்டி தலைவர்கள்

மின்வெட்டிற்காக தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களை அறிவிக்கும் முன்னாள் முதல்வரின் போயஸ் கார்டன் வீட்டில் மட்டும் இரு மாதங்களுக்கான மின்சார பில் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 468 ரூபாய் என்றும், தற்போதைய முதல்வரின் வீட்டில் இது 15 ஆயிரம் என்றும் சட்டசபையில் மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி புள்ளிவிவரம் அளித்திருக்கிறார்.

வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர் என்று தத்தமது தலைவர்களைக் கொண்டாடும் தொண்டர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியளிக்காமல் பெருமிதமளிப்பதாய் இருக்கக் கூடும். ஆனாலும் மின்சாரப் பயன்பாட்டைப் பொறுத்தவரை, தனிநபர் மின்சாரப் பயன்பாட்டில் ஏற்பட்ட அதீத வளர்ச்சி தான் பலரின் பிழைப்பிலும் மண்ணைப் போடத் துவங்கியிருக்கும் இப்போதைய மின்வெட்டுக்கு காரணம் என்பதை அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதீதமான பணப்புழக்கம், அதனால் தனிநபர் வாங்கும் திறன் அதிகரிப்பு இவற்றின் காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் பல்வேறு விதமான மின்சார சாதனங்களும் கடந்த 10 வருட காலத்தில் குறைந்தபட்சம் 40 சதவீதம் வரை அதிகரித்திருக்கின்றன. தொழில்துறை நுகர்வும் இதே அளவு வளர்ச்சியைக் கண்டுள்ளது. (தொழில்துறையைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் செலவுக் குறைப்பு என்கிற அடிப்படையிலேனும் முதலாளிகளால் மின்சார சிக்கனம் கடைப்பிடிக்கப்படுகிறது.)

எதிர்வினை நடவடிக்கைகள் (இதனை கம்யூனிச பதத்தில் பிற்போக்குத்தனம் என்கிறார்கள்) மட்டுமே பழக்கமான நமது தலைவர்கள் தேவையின் அதிகப்பாட்டிற்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று முன்கூட்டி சிந்திப்பார்கள் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான். அப்படி யோசிப்பவர்களாக இருந்தால் வாகன விற்பனை அதிகரிக்கும்போதே டிராபிக் நெரிசல் குறித்து யோசிக்கக் கூடியவர்களாக இருந்திருப்பார்கள். சிறுசிறு மாணவர் மோதல்களின் போதே அது சமுதாயத்தில் ஏற்படுத்தக் கூடிய பின்விளைவு அறிந்து அவற்றைக் களைய முனைந்திருப்பார்கள்.

மின்சாரத்தைப் பொறுத்தவரை, நானோ தொழில்நுட்பம் தான் இந்தியாவுக்கு மற்றும் உலக நாடுகளுக்கும் கூட நிரந்தரத் தீர்வு தரக் கூடும். நமது விஞ்ஞானிகள் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புவதோடு சேர்த்து இது போன்ற சமுதாய அபிவிருத்திகளுக்கும் கொஞ்சம் தங்கள் அறிவியல் அறிவைச் செலவழித்தால் நல்லது. அதுவரை நாம் ஆற்காட்டார் போன்றவர்களின் நிர்வாகத் திறமின்மைகளை சகித்தாகித் தான் தீர வேண்டியிருக்கும்.

ஆனால் அந்த காலம் வரையாவது பாட்டாளிகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் 24 மணி நேரமும் பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் எல்லாம் தாங்கள் உண்மையாகவே மக்களுக்கு இப்போதும் சேவை செய்ய முடியும் என்பதையும், அது தங்கள் பொறுப்புணர்ந்து நடப்பதன் மூலமே சாத்தியம் என்பதையும் புரிந்து கொள்வார்களாக. அறிக்கை விடுங்கள். ஆர்ப்பாட்டம் நடத்துங்கள். அதற்கு முன் அநாவசியமாக ஓடும் ஏசியை அணைத்து விட்டீர்களா என்பதைப் பாருங்கள். ப்ளீஸ்!

Wednesday, November 12, 2008

மரணமில்லாப் பெருவாழ்வு

மரணமில்லா பெருவாழ்வு வேண்டி ஃபெங் சூய் மாஸ்டர் ஒருவரின் பேரில் 13 பில்லியன் டாலர் சொத்தினை உயில் எழுதி வைத்திருக்கிறார் ஆசியாவின் பணக்கார பெண்மணி.

சினாசெம் என்கிற ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யத்தின் முன்னாள் அதிபரான இந்த நினா வாங் என்கிற அம்மணி, தனக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்ட பின், 2006 இல் தனது உயிலை மாற்றி எழுதினார்.

2002 இல் இவர் தனது உயிலை எழுதும்போது சொத்துக்களை தனது குடும்பத்தினருக்கும் அறக்கட்டளைக்கும் எழுதி வைத்திருந்தார். அதனை 2006 இல் மாற்றி எழுதினார். அம்மணிக்கு அவரது கணவரின் மர்மமான மரணம் மூலம் சொத்து வந்தது என்பது ஒரு தனிக்கதை.

அம்மணி சென்ற வருடமே காலமாகி விட்டார்.

இந்த குரு (மாஸ்டர்) தான் அவருக்கு மரணமில்லா வாழ்வு அல்லது நீண்ட வாழ்வு கொடுப்பதாகக் கூறி, தனது பெயருக்கு அவரை சொத்துக்களை மாற்றி எழுதச் செய்திருப்பதாக இப்போது அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

செய்தி இங்கு:
http://economictimes.indiatimes.com/News/News_By_Industry/Asias_richest_woman_gave_away_fortune_in_return_for_eternal_life/articleshow/3698157.cms

இந்த செய்தியின் மூலம் நாம் புரிந்து கொள்வது:

மூடநம்பிக்கைகளும், அதனை புத்திசாலித்தனமாக குருக்களும், சாமியார்களும் பயன்படுத்திக் கொள்வது என்பதும் உலகமெங்கும் காணக் கிடைக்கிறது. (நம்மூரில் சமுதாயப் புரட்சி பற்றி நீட்டி முழங்குபவர்களும் கூட ராகு காலம் பார்த்து மனு தாக்கல் செய்வதும், பெயர் மாற்றம் செய்து கொள்வதும், ஆஸ்தான ஜோசியர்களின் அட்வைஸ்களை அடியொற்றி நடப்பதும் நமக்கு பழக்கமாகி விட்ட விஷயம்.)

13 பில்லியன் டாலர் என்பது நெதர்லாந்து நாடு, மூழ்கும் தனது வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களைக் காப்பாற்ற ஒதுக்கியிருக்கும் 'மீட்பு தொகுப்பு' தொகை. இது எத்தனை தனிநபர்கள் வசம், முதலில் நினா வாங்கின் கணவர், அப்புறம் நினா வாங், இப்போது அந்த மாஸ்டர் என்று விளையாடிக் கொண்டிருக்கிறது. (இது அந்த உயிர்களின் பாதுகாப்பை எந்த விதத்தில் சேதப்படுத்தியதோ தெரியவில்லை). உலக மக்கள் தொகையான 650 கோடி பேரில் சுமார் 93 கோடி பேர் பசியுடன் உறங்கச் செல்கிறார்கள் என்று அமைப்புகள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்க, பணமோ இப்படி தனிநபர் பதுக்கலில் சிக்கி அந்த ஆசாமிகளை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்தால், லெனினும் மார்க்ஸும் தனிநபர் சொத்துடைமை ஒழிப்புக்காக கொதித்தார்கள் என்றால், "தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்று பாரதி கொதித்தார் என்றால், எப்படி கொதிக்காமல் இருப்பார்கள்.

Monday, November 10, 2008

பொருளாதார தேக்கம்: அரசாங்கங்களின் தடுமாற்றம்

சோவியத் ரஷ்யாவின் உடைவை அடுத்து சோசலிச வரலாறு முடிந்து விட்டது என்று அறிவிக்க அவசரப்பட்டவர்கள் பலர். அமெரிக்க பணம் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் புகுந்து விளையாடி, அதன் மேல் உலக மக்கள் மயங்கிக் கிடந்ததும், அமெரிக்க மக்களும் தங்களது நாட்டின் மீதும் அரசாங்கத்தின் மீதும் பெருமை பூரித்துக் கிடந்ததுமாய் இருந்த ஒரு காலகட்டத்தில், அது உண்மை என்றே நம்ப வைக்கப்பட்டது.

ஆனால் மார்க்சியம் என்பது தனிநபர்கள் சார்ந்ததல்ல, தனி அரசாங்கங்கள் சார்ந்ததல்ல, மாறாக ஒட்டுமொத்த அங்கமாக மனித குலத்தின் அபிவிருத்தி சார்ந்தது என்கிற உண்மையை அறிந்தவர்கள் கூக்குரலிட்டாலும் அன்று அதைக் கேட்பவர் இல்லாமல் இருந்தது. இன்று நிலைமை மாறி விட்டது. அன்று நவீன உலகத்தில் சோசலிசம் குறித்து பேசுபவர்கள் கற்பனாவாதிகள் எனப்பட்டார்கள்.

தனியார் கைகளில் இருக்கும்போது தான் உற்பத்தி திறனும், தொழில்நுட்ப மற்றும் மனித குல முன்னேற்றமும் அதி உயர்வில் இருக்கிறது என்று சொன்ன அதே யதார்த்தவாதிகள் இன்று பில்லியன்கணக்கான டாலர்களைக் கொண்டு தனியார்களிடம் இருந்து திவாலாகிப் போன வங்கிகளை தேசிய உடைமையாக்கி பாதுகாக்கப் போவதாக மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார்கள். ஊக வணிகம் உச்சத்தில் இருக்கும் போது, அது ஒரு குமிழியாக இருப்பதை தவிர வேறு சாத்தியமில்லை, அதனை தடுக்க வேண்டும் என்று முயலாத இந்த பெரும் பொருளாதார மேதைகள் அந்த குமிழி உடைந்து குழப்பம் நேர்ந்து விட்ட சமயத்தில், குறைந்த கால விற்பனையை (shortselling) தடை செய்யலாமா என்று கலந்தாய்வு செய்கிறார்கள்.

அமெரிக்காவில், நாளுக்கொரு வங்கி திவாலாகிக் கொண்டிருக்க, அத்துறைகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வாட, வங்கிகளில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் கைகளைப் பிசைந்து கொண்டிருக்க, நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் இருந்தவர்களோ பெரும் தொகைகளைக் கொடுத்து வழியனுப்பி வைக்கப்படும் அவலம் தொடர்கதையாய் ஆகி விட்டது.

உதடுகள் தாராளவாதம் பேசினாலும் உள்ளத்தில் இனவெறி கற்பிதத்தில் அமெரிக்கர்கள் ஊற வைக்கப்பட்டிருந்த ஒரு நிலையில், அந்த இனவெறியையும் தாண்டி மக்கள் ஒரு தீவிர மாற்றத்தை எதிர்நோக்கி, அதனை உறுதியளித்திருக்கும் ஒபாமாவிற்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் இருக்கும் அமைப்பிற்குள் ஒபாமா மட்டும் என்ன செய்து விட முடியும், அவர் செய்ய உண்மையாகவே துணிந்தால் கூட. அவரது பொருளாதார ஆலோசனை குழுவில் முதலீட்டு மேதை வாரன் பபெட்டும், கூகுள் தலைமை அதிகாரிகளில் ஒருவரும் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற்று அமெரிக்க பொருளாதாரத்தை மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்தட்டும், வாழ்த்துவோம். அதுவே அவர்கள் செய்யப் போவது சோதனை தான். இன்று சொல்லி நாளை நடக்கிற காரியம் அல்ல. ஆகலாம் குறைந்தது சில வருடங்கள்.

இதே தரப்பான சோதனையைத் தான் புஷ் நிர்வாகம் 700 பில்லியன் டாலர் மீட்பு தொகுப்பு என்பதாக ஹென்றி போல்சன் வசம் ஒப்படைத்திருந்தது. இந்தியரான காஷ்காரி அவருக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். ஏன்? பணத்திற்கு தேசியம் கிடையாது.

சரி, இப்போது உருவாக்கப்பட்டிருக்கும் குழு சிறந்த மேதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாகவே கொள்வோம். சில வருடங்களில் அவர்கள் திரும்பவும் தூக்கி நிறுத்தட்டும். இங்கிலாந்தின் பொருளாதார தேக்கத்திற்கு அவர்கள் என்ன செய்வார்கள்? ஜேர்மனி, பிரான்சின் நிலைகளுக்கு அவர்கள் என்ன செய்வார்கள்? ஒவ்வொரு நாட்டின் நிலையும் ஒட்டுமொத்தமாக நம் எல்லோரையும் பாதிக்கத் தானே செய்கிறது. அப்படியானால், எல்லா நாட்டிலும் இது போன்ற தலைவர்கள் வேண்டி நாம் யாகம் செய்ய வேண்டியது தானா?

நம் ஊரில் மூன்று ரூபாயாக இருந்த தேநீர் திடீரென 4 ரூபாய் ஆனது. கேட்டால் பீப்பாய் விலை உயர்ந்து விட்டது என்றார்கள். இது நிகழ்ந்தது ஆகஸ்டு மாதம். அக்டோபரில் அதே பீப்பாய் விலை பாதிக்கும் பாதி குறைந்து விட்டதே. ஏன் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் கூக்குரல் தொடர்ந்து ஒலித்தாலே நடவடிக்கை எடுக்கப்படாத நிலை. இந்த இலட்சணத்தில் நம் சாதாரண கண்களுக்கு புலப்படாத எத்தனை விஷயங்கள். எல்லாவற்றிலும், மேலிருக்கும் அதிகாரத்தில் இருக்கும் இந்த தயாள உள்ளங்களை, கருணை உள்ளங்களை, நிர்வாக மேதைகளை நாம் நம்பியிருக்க வேண்டியது தானா? அதிகாரத்துவத்தில் இருக்கும் இவர்களுக்கு தான் என்ன இலட்சியம்? ஓ! மனித குலமே! நீ என்ன ஒரு தேக்க நிலையில் இருக்கிறாய். இத்தனை ஆடம்பரங்கள் இருந்து என்ன பயன். தினந்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் பசியிலும், பாதுகாப்பின்மையிலும் உறங்கிக் கொண்டிருக்க சந்திரனுக்கு ராக்கெட் விட்டதில் பெருமிதம் கொள்ள என்ன இருக்கிறது? அதனை மாற்றுவதற்காகத் தான் நாங்களெல்லாம் அல்லும் பகலும் அரும்பாடுபட்டு உழைத்து வருகிறோம் என்றா உழைத்துக் களைக்கிறார்கள். அவர்கள் அதிகாரத்துவ சுகம் கண்டவர்கள், காண்பவர்கள். பதவி என்பது அவர்களுக்கு அரசாங்க உத்தியோகம். நம் குடும்பத்திற்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொள்ளலாம். அவர்களை பதவியில் உட்கார வைக்கலாம். தலைமுறை தலைமுறைக்கு பணத்தை சேர்த்து வைக்கலாம். குற்ற உணர்ச்சியில் இந்த பிறவியிலும் இன்பம் அனுபவிக்காமல், ஏராளமான ஏழைகள் மற்றும் உரிமை காட்டிக் கொடுக்கப்பட்டோர் சாபத்தில் வரும் ஜென்மங்களிலும் அவர்கள் கீழான நிலையை அடையலாம். இதைத் தவிர அவர்கள் வாழ்க்கையில் என்ன பெரிய சிந்தனை அல்லது சாதனை இருக்கிறது? இந்த மண்புழு வாழ்க்கைக்கு அவர்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்தால், "வேடிக்கை மனிதர்கள்" என்னும் பாரதியின் கூற்று நினைவுக்கு வராமல் இருக்குமா?

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு சாதனை பற்றிப் பேசுபவர்களிடம் பேருந்து நிறுத்தத்தில் நம் கால்களைப் பிடித்துக் கொண்டு விட மறுக்கும் 4 வயது புத்திசாலி பிச்சைக்கார சிறுவனின் துன்புறுத்தலை நாம் சொல்லியழ முடியுமா? சமத்துவபுரம் கண்டவர்களிடம் உத்தபுரம் பற்றி திறந்த விவாதத்தை தான் நாம் கோர முடியுமா? இவர்களின் சாதனைகள் அறிக்கைகளில் இருக்கும். மனித குலத்தின் அபிவிருத்தியில் இருக்காது.

பிச்சைக்காரர் ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் கொடுமை நீக்கம், சாதி ஒழிப்பு, இனவெறி ஒழிப்பு, பசி பட்டினி ஒழிப்பு, இலஞ்ச ஒழிப்பு அனைத்துக்கும் தனித்தனி கமிஷன்கள் போடப்பட்டு பல ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஓய்வின்றி உழைத்து பாவம் அவர்கள் காலம் முடிந்திருக்கிறதே அன்றி இந்த பிரச்சினை ஓய்ந்த பாடில்லை. ஏனென்றால் பிரச்சினை கட்டிடத்தில் அல்ல, அஸ்திவாரத்தில் என்பது அவர்களுக்கு புரியவில்லை. ஏனென்றால் அவர்களும் இந்த அமைப்பால் வார்த்தெடுக்கப்பட்டவர்கள் தான். ஒட்டுமொத்தத்தில் இவர்கள் முட்டாளாக்குவதென்னவோ மக்களைத் தான்.

அதனால் தான், மார்க்ஸ் சொன்னார், தங்களின் உரிமை குறித்த நனவு தொழிலாளர்களிடம் இருக்கும் மட்டும் தான் ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான சரியான அமைப்பு உருவாக்கப்பட முடியும், பாதுகாக்கப்பட முடியும் என்று. இந்தியாவிலும் சரி உலகெங்கிலும் சரி தொழிற்சங்க தலைமைகள் மற்றும் கட்சிகளின் காட்டிக் கொடுப்பினால் இன்று தொழிலாளர் வர்க்கம் அந்த நனவினை பறிகொடுத்த நிலையில் பரிதாபமாக நிற்கிறது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 2000 பேர் ஒரே நாளில் அதிரடியாக வேலைநீக்கம் செய்யப்பட்டு, பின் மறுநாள் அரசியல் நெருக்குதலின் பேரில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். அந்த தொழிலாளர்களோ என்ன நடக்கிறது என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில், ராஜ் தாக்கரே உள்ளிட்ட வலது சாரிகளின் வாசலைத் தட்ட நேர்ந்தது. பிற முதலாளிகளும் கூட, "இதெல்லாம் பக்குவமா செய்ய வேண்டிய வேலை, இப்படியா நாலுபேர் நம்மளை பேசற மாதிரி நடந்து கொள்வது" என்பது போல ஜெட் ஏர்வேஸ் அதிபரை கண்டிக்க தலைப்பட்டார்கள். வேலைக்கு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களில் ஒருவர் சொன்னார், "இப்போதும் நாங்கள் முழுமையாக பாதுகாப்பு உணர்வுக்கு வந்து விடவில்லை. என்ன இனிமேல் ஒருநாளில் தூக்க மாட்டார்கள். ஓரிரு மாதம் கெடு கொடுக்கும் அளவு இரக்கம் காட்டுவார்கள்" என்று.

மென்பொருள் உருவாக்க நிறுவனங்களை பொறுத்தவரையில் சத்யம் நிறுவனத்தில் நடந்தது மட்டும் தான் வெளிப்படையாக வந்தது. இன்னும் ஏராளமான நிறுவனங்கள் சத்தமில்லாமல் இந்த வேலையைச் செய்கின்றன. பல்வேறு வகையாக இந்த செலவுக் குறைப்பு மேற்கொள்ளப்படுகிறது. செயல்திறன் அடிப்படையில் கீழ்நிலை பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவது என்பதும், மற்றவர்களின் சம்பளத்தை 'மறுகட்டமைப்பு' செய்வது என்பதும் தான் இதன் அடிநாதமாக இருக்கிறது. ஆனால் இந்த செலவுக் குறைப்பில் எல்லாம் நிறுவனத்தின் உயர் பதவிகளில் இருக்கும் ஒரு சதவீதம் பேர் கருத்தில் கொள்ளப்படுவார்களா என்பதற்கு பரவலாக எங்குமே விடை காண முடிவதில்லை. முடிவு மேற்கொள்ளும் நடைமுறையில் அவர்கள் தானே இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்ட முடிவுகளால் தானே நிறுவனம் இப்படி எதிர்மறை திசைக்கு போயிருக்க வேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் முன்கூட்டியே எச்சரித்தாவது இருந்திருக்க வேண்டுமல்லவா? என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள். அவர்களுக்கு பிடிக்காது. அது தான் முதலாளித்துவம். அந்த சூட்டினை மன்மோகன்சிங்கே சற்று காலத்திற்கு முன் வாங்கியது உங்களுக்கு நினைவிருக்கலாம். (தலைமை நிர்வாக அதிகாரிகள் எல்லாம் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தது). அவர் ஒரு அய்யோ பாவம் ஆசாமி. அவரை விடுவோம்.

இடவாரத்தில் குடவாரமாக, இப்போது மின்வெட்டினால் நிகழும் வேலை இழப்பு வேறு. நமது மோசமான நிர்வாகம் இந்த நெருக்கடியான சமயத்தில் தானா வேலையைக் காட்ட வேண்டும். ஏற்கனவே வாங்கும் அமெரிக்கர்களிடம் துட்டு இல்லாமல் போனதில் இங்கிருக்கும் (சீனாவிலிருக்கக் கூடியதும்) ஏற்றுமதியாளர்கள் எல்லாம் அமெரிக்கர்கள் கையில் எப்படி பணம் வரச் செய்யலாம் என்ற யோசனையிலோ அல்லது எப்போது தான் அவர்கள் கையில் பணம் வரப் போகிறதோ என்கிற கவலையிலோ இருக்க, உற்பத்தி குறைந்து ஏற்றுமதியில் பெரும் சரிவு நிகழ்ந்திருக்கிறது. இந்த சமயத்தில் நமது அய்யாக்கள் வேறு மின்சார நிர்வாகத்தை "எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில் சரியா வர மாட்டேன்" என்று ரஜினி ஸ்டைலில் நடத்தினால் பாவம் உழைக்கும் மக்கள் எங்கு தான் போவது?

இன்னும் இதுபோல் நிகழ்வுகள் தொடர்கதையாகி, சமூகத்தில் கொந்தளிப்பை படிப்படியாக அதிகப்படுத்தி வருகின்ற சூழலில், சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு வலது சாரி கும்பல்களும் தேசியவாத தலைமறைவுக் குழுக்களும் இந்த முதலாளியைக் குத்து, அந்த மாநிலத்துக்காரனை வெட்டு என்று கிளம்பி நம் உயிரெடுக்கிறார்கள்.

இந்த நிலையில், மனித குலத்தின் அபிவிருத்தி இந்த கூச்சல்களிலும் குழப்பத்திலும் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக தேங்கி நிற்கிறது. இதிலிருந்து வெளிவருவதும், மனித சமுதாயத்தை அதன் நடப்பு அவலங்களில் இருந்து மீட்டு முன்னெடுத்து செல்வதும் தொழிலாளர் வர்க்கம் அல்லது உழைக்கும் வர்க்கத்தின் நனவான சிந்தனைகளில் தான் எழ முடியும். உலகெங்கிலும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் சாதாரண உழைக்கும் மக்களாகத் தான் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த நனவைக் கொண்டு செல்வது என்பது தொழிலாளர் வர்க்கத்தின் முன்னேறிய பிரிவினரால் மட்டுமே சாத்தியப்படும். அதற்குத் தேவை நிறுவனங்களில் மலிவு உழைப்பை வழங்க நிர்ப்பந்திக்கப்படாத சிறப்புரிமையை தமது திறனால் ஈட்டியிருக்கும் உண்மையான சிந்தனை மேம்பட்ட புத்திஜீவி தொழிலாளர்கள். ஒருவேளை அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், மனித குல வரலாறு உங்கள் தோள் மீதும் தாங்கப்பட்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள். நாம் இழப்பதற்கு எதுவுமில்லை, பெறுவதற்கு இந்த உலகமே இருக்கிறது என்று மார்க்ஸ் விடுத்த அழைப்பில் இருந்து நாம் சில அடிகளும் முன்செல்லாமல் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.

நம் வாழ்நாளுக்குள் அத்தகையதொரு உலகைக் காணும் கனவினைக் காணுவோம். அந்நாள் வரையிலும் மட்டும் ஒபாமாக்கள் கொண்டுவரும் சின்ன சின்ன மாற்றங்களில் மகிழ்ச்சி கொள்வோம்.

(பின்குறிப்பு: இந்த கட்டுரை எழுதுவதற்கான தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்திய www.wsws.org/tamil தளத்திற்கு நன்றி).