Monday, December 26, 2005

காயம்தனை காலம் ஆற்றட்டும்- சுனாமி நினைவுகள்

ராமாயணத்தில் ஒரு காட்சி. குளிக்க ஆற்றுக்கு செல்லும் ராமன் வில் அம்பை எடுத்து கீழே வைக்க விழைகிறான். அம்பை படுக்கை வசமாக வைக்க கூடாது. நிறுத்தி தான் வைக்க வேண்டும். அதனால் அம்பை அவன் நேர்குத்தாக மண்ணில் செருக ஆ என்று வலியுடன் கூடிய அழுகை சத்தம் ஒன்று கேட்கிறது. திடுக்கிட்ட ராமன் அம்பை பார்க்க அதன் கீழே ஒரு தேரை உயிருக்கு போராடி கொண்டிருந்தது. ராமனுக்கு கண்ணில் நீர் அரும்பி விட்டது. அவன் அந்த தேரையை பார்த்து சொல்கிறான், "தேரையே என்னை மன்னித்து விடு. நான் உன்னை கவனிக்காமல் இத்தவறினை செய்து விட்டேன். நான் அம்பை ஓங்கும்போது நீயாவது ராமா என்று ஒரு சிறு குரல் கொடுத்திருக்கலாமே. என்னை இப்பிழையிலிருந்து காப்பாற்றி இருக்கலாமே" என்று கேட்டான். இப்போது தேரை மரண வலியிலும் மகிழ்ச்சியுடன் பேசியது. "ராமா, யார் எனக்கு தீங்கு செய்ய விழைந்தாலும் நான் ராமா என்று உன்னை அழைப்பது வழக்கம். இன்றும் அம்பு என்னை நோக்கி வருவதை கண்டு அப்படித்தான் நான் வாயெடுத்தேன். ஆனால் அம்பை செலுத்துவதே நீ தான் என்று கண்டதும் செய்வதறியாது நான் வாயடைத்து நின்று விட்டேன்" என்று கூறியது. ராமன் கண்ணீர் பெருக்குடன் 'என்னை மன்னித்து விடு' என்று கூற 'அறியாமல் செய்யும் தவறுகள் அப்போதே மன்னிக்கப்படுகின்றன என்று சொன்னவனே நீ தானே' என்று தேரை கூறி உயிரை விடுவதாக கதை முடிகிறது.

சென்ற வருடம் இதே நாளில் கடலும் தன் சக்தியை இவ்வாறு தான் காட்டியது. கடலை தன் தாயாக நினைத்த மீனவர்கள், நண்பனாக பாவித்த குழந்தைகள், வாக்கிங் சென்று கொண்டிருந்தவர்கள் அனைவரையும் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் தன்னுள் சுருட்டிக் கொண்டது. (அளவு கடந்த பாசத்தால் தான் தன் அமானுஷ்ய அமைதியில் அவர்களையும் இழுத்து கொண்டதுவோ ).

( சுனாமி சமயத்தில் எனக்கு தோன்றிய கவிதை(?) இங்கே
http://sangathamizh.blogspot.com/2005/06/blog-post.html )

இதில் ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மத ரீதியில் இதற்கு ஒரு விளக்கம் கொடுக்க முற்பட்டது பரிதாபம் என்றால் சாதி மத இன தேச வரம்புகள் தாண்டி உதவிக் கரம் நீண்டது மனித மகத்துவம். விவேக் ஓபராய் நாகப்பட்டினம் வந்து தானே முன்னின்று நிவாரணப் பணிகளுக்கு உதவியது கலாச்சார மனிதாபிமானத்திற்கு உதாரணம் என்றால் ஏராளமாகக் குவிந்த நிதியினை விநியோகம் செய்கிறேன் என்ற பெயரில் எவ்வளவு பணம் ஊழல் செய்யலாம் என்று எண்ணிய மனித குணம் விலங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதை நிரூபணம் செய்யும் மிருகத்தனம்.

சுனாமி, பூகம்பம், மழை என கடந்த 400 நாட்களில் இயற்கை நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் அதன் வலிமை மற்றும் பேரழிவு மேலாண்மையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன என்பது.

இலங்கையிலே சுனாமிக்கு தன் முழு குடும்பத்தையும் இழந்து கதறி அழுத ஒருவர் சொன்னார், என்னை விட்டு எல்லோரும் சென்றது ஏன் ? என்னை விட்டு விட்டது ஏன்?

"Why all have left ? Why I have been left ? "

அவருக்கு எந்த சக மனிதனும் என்ன ஆறுதல் கூறி விட முடியும் ? விசித்திரமான இந்த உலக வாழ்க்கை தினந்தோறும் முடிச்சுகளை போடுவதும் அவிழ்ப்பதுமாக தனது அதீத விளையாட்டை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. அதன் அசைவுகளை புரிந்து கொள்ள நாம் பல யுகங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது.

சுனாமி பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளில் மக்கள் தம் கண்ணீரைத் துடைத்து விட்டு மீண்டும் தனது இயல்பு வாழ்க்கையை தொடர்வதை பார்க்கும்போது மனிதத்தின் சக்தியும் இயலாமையும் ஒருங்கே வெளிப்படுகிறது. மீண்டவர் தம் நல்வாழ்வில் மாண்டவர் ஆத்மா சாந்தி பெறட்டும். பழியினை படைத்தவன் ஏற்கட்டும், காயம்தனை காலம் ஆற்றட்டும்.

Saturday, December 17, 2005

சேப்பலின் பிடியில் இந்திய கிரிக்கெட் ?

இந்தியா மளமளவென்று வெற்றிகளைக் குவித்து வருகிறது. டிராவிட்டின் தலைமைக்கு புகழ் மலை குவிகிறது. சேப்பல் விஷயத்தில் எல்லோரும் எச்சரிக்கை உணர்வில் மவுனத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். இளம் வீரர்கள் கொடுத்த வாய்ப்புகளில் சிறப்பாகப் பிரகாசிக்கிறார்கள். ஐசிசி தரப் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் போல் தெரிகிறது.

எல்லாமே திடீரென்று வெளிச்சமாகி விட்டது போல் தெரிகிறது. ஆனால் இந்த தோற்றம் உண்மைதானா அல்லது மாயையா என்று உள்ளே ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனென்றால் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தாலும் கூட டிராவிட் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுவதாகத் தெரியவில்லை. ஏன் ?

எப்போதுமே வெற்றி பெறுவோர் செய்த தவறுகள் கண்டு கொள்ளப்படுவதில்லை. நமது அணியின் உண்மையான மதிப்பீட்டை இலங்கை ஒரு அணியுடனான ஆட்டத்தின் மூலம் நிர்ணயிப்படுத்திக் கொண்டு அதனடிப்படையில் தடாலடி முடிவுகள் எடுப்பது அறிவார்ந்த செயல் தானா என்பதில் நமக்கு சந்தேகம் இருக்கிறது.

கிரிக்கெட்டின் இடையே டிடியில் ஒருவர் ஸ்ரீகாந்த்திடம் கேள்வி ஒன்று கேட்டார். அதாவது சீனியர் பிளேயர்கள் பந்துவீச்சாளர்களை ஆதிக்கம் செய்வதை விட புதிய வீரர்கள் நன்றாக ஆதிக்கம் செலுத்தி விளையாடுகிறார்களே அது எப்படியென்று. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீரர் நன்றாக விளையாடுவார், அதனை வைத்து நிரந்தர முடிவுக்கு நீங்கள் வந்து விடக் கூடாது, ரன் குவிப்பு மட்டுமல்ல விளையாட்டு திறன் மற்றும் பல வகைமுறைகளை வைத்துத் தான் வீரர்களை மதிப்பிட வேண்டும், அணி வெற்றியே முக்கியம், இதில் சீனியர் ஜூனியர் என்று அனாவசியமான குழுபிரித்தல் இருக்கக்கூடாது என்று அவருக்கு விளக்குவதற்குள் ஸ்ரீகாந்திற்கு போதும் போதும் என்றாகி விட்டது.

சரி விஷயத்திற்கு வருவோம். அதற்குள் அவசரப்பட்டு பலர் கோபம் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

1. முதலில் கங்குலி செய்த அதே தவறைத் தான் இப்போது சேப்பலும் கிரிக்கெட் தேர்வுக்குழுவும் (வாரியமும் கூட ) செய்கிறது. எப்படி அவர் ஜிம்பாப்வேயுடன் அடித்த சதத்தை பெரிய சாதனையாக எண்ணிக் கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து மாட்டிக் கொண்டாரோ அதேபோல இப்போது இந்திய அணியின் சிந்தனை மூலங்களும் இலங்கை அணியுடனான ஒரே தொடரை மனதில் வைத்துக் கொண்டு பல முடிவுகள் எடுப்பது நிச்சயம் அசட்டுத்தனம். கங்குலி செய்த தவறு தனி மனிதன் செய்யும் தவறு, அது இயல்பு என்று விட்டு விடலாம். ஆனால் இப்படி ஒரு கும்பலே சேர்ந்து செய்யும் தவறுக்கு யார் பொறுப்பேற்பது?
2. கங்குலியை மூன்றாவது ஆட்டத்திற்கு எடுக்காததிற்கு மோரே சொல்லியிருக்கும் பதில் : "கங்குலியை ஆறாவது இடத்தில் இறக்க அணிக்கு விருப்பமில்லை, அது யுவராஜ் சிங்கிற்கு செய்யும் அநீதி, இதன் மூலம் கங்குலிக்கு கதவு மூடப்பட்டதாக அர்த்தமில்லை". அவர் சொல்வது அவருக்காவது புரிகிறதா என்று தெரியவில்லை, கங்குலியை இரண்டாவது ஆட்டத்திற்கு எடுக்கும்போது என்ன நினைத்து எடுத்தார், அதற்கு என்ன பங்கம் வந்து விட்டது. கங்குலி சீனியர் பிளேயர் என்று ஒத்துக் கொள்ளும் இவர்கள் இனி இவர் எப்போது அணிக்கு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உண்மையில் நீங்கள் இளம் வீரர்களை ஊக்குவிப்பதற்காக கங்குலியை எடுக்க விரும்பவில்லை என்றால் இரண்டாவது ஆட்டத்திற்கு எதற்காக எடுத்தீர்கள், அப்படியே இருந்தாலும் பலமுறை தேர்வு பெற்று நீக்கப்படும் அகர்கர் என்ன 16 வயது வீரரா ? அவ்வளவு ஏன், இப்போது கங்குலிக்கு எதிராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் வாசிம் ஜாபர் 2000லியே அறிமுகப்படுத்தப்பட்டவர் தானே, 2002ல் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டவர் தானே, அவசரம் அவசரமாக கங்குலியை நீக்கி விட்டு அவரைக் கொண்டு வர வேண்டிய திடீர் அவசியம் என்ன வந்தது.

கங்குலி நீக்கப்பட்டிருப்பதில் பலருக்கு அதிக வருத்தம் இல்லை, ஆனால் அவர் கையாளப்பட்டிருக்கும் விதம் எந்த ஒரு தன்மானமுள்ள இந்தியனையும் காயப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வீரர்கள் தேர்வு என்பது பல்வேறு வீரர்களின் நிறை குறைகளை ஆராய்ந்து அணிக்குப் பலம் தரும் வகையில் சரியான விகிதத்தில் வீரர்களைத் தேர்வு செய்வது. அதை விட்டு விட்டு யாரோ ஒரு நபர் இவர் வேண்டும் அவர் வேண்டும் என்று கூறுவதற்கு தங்களுடைய கணிப்புத் திறனை அடகு வைத்து விட்டு ஒரு குழு தேர்வு செய்தால் ஐயோ பாவம் அதன் பலன் வெகு விரைவில் காலம் காண்பித்து வைக்கும் . பலருக்கு 2007 உலகக் கோப்பை தான் இலக்கு என்று கூறுவது பேஷனாகி விட்டது. தவறில்லை. ஆனால் திடீர் மாற்றங்கள் பலனளிக்காமல் போனால் சீனியர்களையும் கூப்பிட இயலாமல் புதிய வீரர்களையும் கோபிக்க இயலாமல் திரிசங்கு சொர்க்கமாகி விடுமே? அதற்கு இவர்களிடம் பதில் இருக்கிறதா?

இப்போது கங்குலியை தூக்கி விட்டார்கள். நமது அடுத்த பயணம் பாகிஸ்தானுக்கு. அங்கே ஷோகிப் அக்தரை அவரது ஊரிலேயே சந்திக்க வேண்டும், அது மட்டுமல்ல அவர்களது பேட்ஸ்மேன்கள் சிறந்த பார்மில் உள்ளனர், ஆசஸில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்த இங்கிலாந்து அணியே ஸோகிப் அக்தரின் பந்துவீச்சிலும், முகமது யூசிப்பின் ( அதாங்க நம்ம யூசுப் யுகானா ) பேட்டிங்கிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. அப்படியிருக்கிற பட்சத்தில் அந்த அணியுடனான ஆட்டங்கள் மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. சென்ற முறை கங்குலி தலைமையில் சென்ற அணி பாகிஸ்தானிலிருந்து தொடரை வெற்றி கொண்டு திரும்பியது என்பது தெரிந்திருக்கும். அப்படியிருக்க இந்த முறை பாகிஸ்தானில் ஜெயிக்க முடியாவிட்டாலும் படு தோல்வியைச் சந்தித்தால் அப்போது கிரன் மோரே என்ன செய்வார்? தொடர்ந்து இளம் வீரர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்ற உறுதியை அவரால் தர முடியுமா ? ஒரு தொடர் படுதோல்வி அடைந்து விட்டால் பிறகு எல்லாமே ஆரம்ப கட்டத்திற்கு வந்து விடும். அப்புறம் கூடி அமர்ந்து புலம்புவதைத் தவிர யாராலும் என்ன செய்ய முடியும்.

இவர்கள் இந்திய கிரிக்கெட் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர்களாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். கங்குலியை அணியில் எடுப்பது அணியில் ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும் என்று கருதினால் கங்குலியை இரண்டாவது ஆட்டத்திற்கு தேர்வு செய்திருக்கவே வேண்டாம், அப்போது கூட இவ்வளவு சர்ச்சைகள் இருந்திருக்காது. கங்குலிக்கும் வாய்ப்புக் கொடுத்து அவரும் தன்னை நிரூபிக்க வேண்டிய பதைப்பில் நிதானமாகவே (வழக்கத்தை விடக் கவனமாகவே ) ஆடி சிறப்பாகவே ரன் எடுத்திருக்கிறார். அச்சூழ்நிலையில் அவருக்கு மேலும் சில வாய்ப்புகள் கொடுத்து ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் இவர்கள் ஏற்கனவே தீர்மானம் செய்திருந்த கங்குலியை நீக்கும் முடிவையாவது சில ஆட்டங்களுக்குத் தள்ளிப் போட்டிருக்க வேண்டும்.

குதிரை கீழேயும் தள்ளி குழியும் பறித்தது போல் கங்குலியை நீக்கியதை விட ஆத்திரப்பட வைத்திருப்பது வாசிம் ஜாபரின் தேர்வு. ஏனென்றால் கங்குலிக்கு பதிலாக அடுத்த ஆட்டத்தில் முகமது கைப் இடம் பெற்றிருந்தாலோ அல்லது வேறு தவிர்க்க முடியாத வீரர்கள் இடம் பெற்றிருந்தாலோ யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. ஆனால் ஏற்கனவே இரண்டு முறை பரிசோதிக்கப்பட்ட மும்பையின் வாசிம் ஜாபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கி இருக்கிறது. இதனால் தான் தேர்வுக் குழுவின் முடிவில் வாரியத்திற்கு தொடரிபில்லை என்கிற சரத்பவாரின் கூற்றை ஏற்றுக் கொள்ள நம் மனம் மறுக்கிறது. வாசிம் ஜாபர் திறமையான வீரர் என்பதிலோ உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவித்துக் கொண்டிருக்கிறார் என்பதோ மறுக்க முடியாது தான். ஆனால் இவையெல்லாம் திடீரென்று நடந்த விஷயமா என்ன? இரண்டு டெஸ்டுகளுக்கு எடுக்காத ஒருவரை திடீரென்று மூன்றாவது டெஸ்டில் கங்குலியை நீக்கி விட்டு எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பது தான் கேள்வி.

இப்போது அரசியல் வேறு புகுந்து விட்டது. கம்யூனிஸ்டுகளும் ஜார்கன்ட் சட்டசபையும் ஜனாதிபதியின் தலையீட்டை கோரியிருக்கின்றன ( சிபிஐ விசாரணை சீசன் போய் இப்போது ஜனாதிபதி தலையீடு சீசன் போலும்). எனவே சம்பவங்கள் தங்களது பாதையில் தானாகவே பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் சம்பந்தப்பட்ட சிலர் தங்கள் காதில் போட்டுக் கொள்ள சில வார்த்தைகளைக் கூறி வைப்போம் .

சேப்பலுக்கு சில வார்த்தைகள்
உங்கள் ஆர்வம் தவறானதல்ல. உங்களது பாதையை அறிந்தவர்களுக்கு அது புதிதும் அல்ல. ஆனால் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. உலகத்தில் உள்ள எந்த கிரிக்கெட் வீரருமே இந்தியாவில் கிரிக்கெட் ஆடுவதை ஒரு லட்சியமாக கருதுவார்கள், உலக முதன்மை அணியாகக் கருதப்படும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் உட்பட, ஏன் என்று தெரியுமா உங்களுக்கு? இந்தியாவின் கிரிக்கெட் உணர்வினை அவர்கள் தங்களது நாட்டில் கூடக் காண்பதில்லை என்பது தான். அந்த அளவுக்கு ஆணி வேர் முதல் நுனிக்கிளை வரை இந்தியர்களின் உணர்வில் கிரிக்கெட் உணர்வு ஊறிப் போயுள்ளது. அதனால் தான் எத்தனையோ சர்ச்சைகளைத் தாண்டியும் அது சிறிதும் சேதாரமில்லாமல் வெற்றி நடை போடுகிறது. வீரர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் இந்த உணர்வு மங்குவதில்லை. அதனால் தான் ஒவ்வொருவரும் தங்களால் அணிக்கு என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து அதன் வரலாற்று ஏடுகளில் தங்கள் பெயரை அழுத்தமாக எழுத முனைகிறார்கள். எப்படி ஒரு வீரர் வெற்றி பெறும்போது அவரை ஊரே கொண்டாடுகிறதோ அதேபோல் அவர் தடுமாறும்போது அவரை ஊரே திரண்டு வந்து ஏசும். புகழ் மாலை சூட்டுவதிலும் அல்லது வசைமாலை தொடுப்பதிலும் மனிதர்களின் சிந்திக்கும் திறன் தாண்டி ஆதிக்கம் செலுத்தத்தக்கக் கூடியது இந்த உணர்வு.

அதனால் தான் அந்த நாட்டில் வந்து தங்கள் பெயர் பொறித்துச் செல்ல உலக வீரர்கள் ஆசைப்படுகிறார்கள். ஏன் ஸ்டீவ் வாக் சொல்லவில்லை, இந்தியாவில் வெற்றி பெறும் என்னுடைய கனவு நிறைவேறாமலேயே போய் விட்டது என்று. நீங்கள் இந்தியாவில் ஒரு ஆட்டம் கூட ஆடியதில்லை. அதனால் ஒருவேளை உங்களுக்குப் புரிந்து கொள்ள கடினமானதாக இருக்கலாம். இப்படிச் சொல்வது உங்களை பயமுறுத்துவதற்காக அல்ல, உங்களை விழிப்பூட்டுவதற்காக. அதே போல் நீங்கள் செய்வது எல்லாம் தவறென்றும் கூறவில்லை, நீங்கள் உண்மையாகவே இந்திய கிரிக்கெட்டின் நலன் கருதிச் செயல்படும் பட்சத்தில் உங்களது சிந்தனைகளை செயல்படுத்திப் பார்க்க உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அதே சமயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள் என்று தான் கூற விழைகிறோம். ஏனென்றால் எல்லோருக்கும் மோசமான நாட்கள் வரும், இப்போது சொர்க்கமாகத் தோன்றும் பதவி திடீரென்று முள் படுக்கையாகி விடும், இப்போது கைதட்டி ஆரவாரிப்பவர்கள் எல்லாம் அப்போது கைகொட்டிச் சிரிப்பார்கள். அதை எதிர்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் உங்களது போக்கில் தவறில்லை. அப்படியல்லாமல் சீர்திருத்தம் என்கிற பெயரில் கண்மண் தெரியாத மாற்றங்களில் ஈடுபட்டால் பின்னால் அவசரத்தில் காரியம் செய்து சாகவாசமாக சங்கடப்பட்ட கதையாகி விடும். அதனால் நினைத்ததையெல்லாம் செயல்படுத்த எண்ணும் பேரவா கொண்ட இளைஞனைப் போல் அல்லாமல் உங்கள் பதவி மற்றும் கவுரவத்திற்குரிய முதிர்ச்சியுடன் செயல்படுங்கள். ஏனென்றால் கங்குலி விவகாரம் அவருக்கு எதிராகப் போனதற்கு காரணம் அவரது அவசரம் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்களே அறியாமல் நீங்களும் அதேபடகில் பயணம் செய்யும் நிலையை உருவாக்கி காலம் விளையாடுவதை கணக்கில் கொள்ளுங்கள். இது உங்கள் நலன் கருதி மட்டுமல்ல, உங்களின் கையில் இருக்கும் இந்திய கிரிக்கெட் என்கிற விலை உயர்ந்த வைரத்தின் நலன் கருதியும் கூட. நீங்கள் தடுமாறி அதை தவற விட்டால் பாதிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நாம் முன்பு சொன்ன அவர்களின் கிரிக்கெட் உணர்வுக்கும் தான்.

டிராவிட்டுக்கு சில வார்த்தைகள்

கேப்டனாக தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களின் அர்ப்பணிப்பு உணர்வு கற்பனைக்கும் அப்பாற்பட்டது. எத்தனையோ ஆட்டங்கள் உயிரைக் கொடுத்து ஆடிய ஆட்டங்கள் ஒன்று அணி தோல்வியுற்றதாலோ அல்லது இன்னொரு வீரர் அதிரடியாக ரன் குவித்ததாலோ இருட்டடிக்கப்பட்டு விட்ட்தைக் கண்டு எப்போதும் மனம் தளராமல் யார் கேப்டனாக இருந்தாலும் தன்னுடைய பணியை மிகச் சிறப்பாக ஆற்றிய ஒரு முன்னுதாரண வீரராகத் திகழ்வதில் சந்தேகமில்லை. ஆனால் இப்போதெல்லாம் பதான், தோனி சிறப்பாக விளையாடினால் உடனே சேப்பல் முன்னிறுத்தப்படுகிறார், அணித் தேர்வு விவகாரம் என்றால் சேப்பல் முன்னிறுத்தப்படுகிறார், ஊடகங்களும் கேப்டனை விட பயிற்சியாளருக்கே முக்கியத்துவம் கொடுப்பது நிச்சயம் தற்செயலான சம்பவங்களாகத் தெரியவில்லை. மாறாக அதிகார மையம் கேப்டனிடமிருந்து பயிற்சியாளர் கைக்குச் சென்று விட்டதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இதன் ஆபத்து நான் முன்னே குறிப்பிட்டதைப் போல் தொடர்ந்து சவாலான தொடர்களைச் சந்திக்கும்போதுதான் தெரியும்.

நீங்கள் பட்டும் படாமல் பதிலளித்தால் ஏற்கனவே பாதுகாப்பின்மை உணர்வால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வீரர்கள் எப்படி உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள். அது மட்டுமல்ல உலகம் முழுக்க எந்த அணியை எடுத்துக் கொண்டாலும் தலைமைப் பண்பின் முதல் தேவையே ஆதிக்க ஆளுமை உணர்வு தான். அந்த பதவிக்குரிய சுயமரியாதைக்கும் கவுரவத்திற்கும் தீங்கு நேராமல் பாதுகாப்பது கள ஆட்டத்தினைப் போன்றே நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாகும். ஏனென்றால் பணிவினை பலவீனமாகப் புரிந்து கொள்ளும் ஆபத்து உலகெங்கும் இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சில விஷயங்கள்

1. ஒரு தொடரை வைத்து முடிவெடுக்க அவசரப்படாதீர்கள். பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துடனான ஆட்டங்களுக்குப் பிறகு தான் நம் அணியின் உண்மையான பலம் தெரியவரும். அதனால் ஊடகங்களின் வர்த்தக மிகைப்படுத்தலுக்குப் பலியாகி மாயையில் மூழ்கி விட்டு பிறகு பெரிய அணி ஒன்றுடன் படுதோல்வியைச் சந்தித்தால் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போல் உண்மை நம்மை முகத்தில் அறையும் நிலை ஏற்படும்.

2. மாநில எல்லைகளை கிரிக்கெட் கடந்து பல ஆண்டுகளாகி விட்டன, இன்னமும் கல்கத்தா, மும்பை என்று இருப்பிட ரீதியாக கிரிக்கெட் உணர்வுகளை வளர்க்காதீர்கள். இப்படி ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவரும் தங்கள் மாநில வீரர் விளையாட போராட்டத்தில் இறங்கினால் 28 மாநிலங்கள் இருக்கிறது நம் நாட்டில், ஆனால் கிரிக்கெட்டில் 11 பேர் தான் விளையாட முடியும்.

3. ஊடகங்களின் கருத்துத் திணிப்பில் கவனமாக இருங்கள். ஏனென்றால் ஊடகத்தில் இருக்கும் சில தனி நபர்களின் விருப்பு வெறுப்பு கருத்துகளின் உண்மையை கபளீகரம் செய்யும் ஆபத்தை சமீபத்தில் பல ஊடகங்களில் காண முடிகிறது. எனவே கருத்துக்களில் உண்மையைக் கண்டுகொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் போலிகளிடம் ஏமாந்து நீங்கள் தவறான கருத்துகளை கிரகித்துக் கொண்டிருக்க நேரும். ( இந்த உண்மை கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, சமூகம், இலக்கியம் , அரசியல் என்ற எல்லாவற்றிற்கும் பொருந்தும்).

தேர்வுக் குழுவினருக்கு சில விஷயங்கள்

அய்யா புண்ணியவான்களே, கிரிக்கெட் தேர்வில் சர்ச்சை என்பது புதிதல்ல, எத்தனையோ பிரமாதமான ஆட்டக்காரர்களின் சேவையையே தேர்வுக் குழுவினரின் அசட்டைத் தேர்வினால் இந்தியா இழந்துள்ளது. ஆனால் முன்பு அவர்கள் தவறு செய்தபோது தொழில்நுட்பம் இவ்வளவு வளரவில்லை, கிரிக்கெட் இவ்வளவு பணம் குவிக்கவில்லை, இவ்வளவு அரசியல் தலையீடுகளும் இல்லை, ஊடகங்களின் கழுகுப் பார்வையும் இல்லை. நீங்கள் செய்யும் தவறுகள் சில வீரர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அணியின் தேசத்தின் கவுரவம் சம்பந்தப்பட்டது. அதனால் முடிவுகள் எடுக்கும்போது தீர சிந்தித்து சிறந்த முடிவினை எடுங்கள். அப்போது தான் அந்த முடிவுகளை யாரிடமும் நியாயப்படுத்தும் தைரியம் உங்களுக்கு கிடைக்கும். அப்படியல்லாமல் உங்களின் சுய விருப்பு வெறுப்புகளை தேர்வில் திணித்து விட்டு, பிறகு கேள்வி எழும்போது நானில்லை நானில்லை என்று யார் பின்னாலோ ஓடி ஒளிய முயற்சிக்காதீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சில விஷயங்கள்

ஐயா அரசியல்வாதிகளே, நீங்கள் அரசியலில் செயல்படும் லட்சணத்தை நாடே தொலைக்காட்சிகளில் கண்டு சிரிக்கிறது, நீங்கள் இந்தியர்களின் உணர்வோடு கலந்து விட்ட விளையாட்டான கிரிக்கெட்டையாவது விட்டு வைக்கக் கூடாதா. கிரிக்கெட்டில் மிகுந்த பணம் புழங்குவது என்பது உண்மை தான், அதனால் நீங்கள் அதில் கவனம் கொள்ளாமல் இருக்க முடியாது என்பதும் உண்மை தான். ஆனால் கிரிக்கெட்டில் மட்டுமா பணம் புழங்குகிறது, இப்போதெல்லாம் கேள்வி கேட்கக் கூட உங்களுக்கு பணம் கிடைக்கிறதே, பிறகென்ன. ம். போகிற போக்கில் கங்குலி ரன் அடிக்கக் கோரி மறியல், அகர்கர் விக்கெட் எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம், பார்தீவ் படேல் கேட்ச் பிடிக்கக் கோரி உண்ணாவிரதம் என்று நீங்கள் கிளம்பாமல் சரி.

கங்குலிக்கு நாம் இப்போது சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் இப்போது கிளம்பியிருக்கும் சர்ச்சையால் அடுத்து வரும் பாகிஸ்தான் பயணத்தில் அவரின் தேர்வு உறுதியாக்கப்பட்டு விட்டது. ஆனால் எப்போதும் கழுத்துக்குக் மேலே தொங்கும் கத்தி ஒருபக்கம் விளையாடி ரன் குவித்து அதன்மூலம் அவருக்காக வாதாடியவர்களின் தரப்பை நியாயப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபக்கம் என 'நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு' என்று கண்ணதாசன் பாடியது போல் ஆகிவிட்டது அவர் நிலை. அவரது விதி இப்போது காலத்தின் கையில். (இந்த நிலையை தனக்கே இழுத்து விட்டுக் கொண்டது அவர் தான் என்பது வேறு விஷயம்.)

Wednesday, October 12, 2005

புலி வாலைப் பிடித்த இந்திய கிரிக்கெட் வாரியம்


சேப்பல் கங்குலிக்கு இடையே துவங்கிய பிரச்சினையை யாருமே நம்ப முடியாத துரிதத்தில் சுமூகமாக்கி "எல்லோரும் நல்லவரே,தவறு மேல் தான் தவறு" என்பது போல் சில பேட்டிகளும் கொடுக்கப்பட்டு விட்டன. மீடியா உலகமும் அடுத்த திடுக்கிடும் செய்திகளை நோக்கி தன் கவனத்தை திருப்பி விட்டது. 'சச்சின் தென்டுல்கர் சேலஞ்சர் கோப்பையில் விளையாடுகிறார். எல்லாம் இன்பமயம்' என்பது போல ஒரு மாயை உருவாக்கப்பட்டு விட்டது. பிரச்சினைகள் முடிந்தா விட்டது? உண்மையில் இப்போது தான் பிள்ளையார் சுழியே போடப்பட்டிருக்கிறது. இதில் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால் உண்மையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குக் கூட கிரிக்கெட் வாரியம் இதுவரை பதிலளிக்கவில்லை என்பது தான்.

முதலில் "நடந்தது என்ன? " என்பதே யாருக்குமே புரியவில்லை. சேப்பல் என்னடாவென்றால் கங்குலி மீது ஆயிரம் புகார்களை அடுக்கி விட்டு இ-மெயில் வெளியானது ஏமாற்றமளிப்பதாக பேட்டியளித்தார். கங்குலியோ அத்தனை புகார்களும் பொய் என்று கூறி விட்டு சேப்பலே தான் இமெயிலை பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி விட்டு நாடகமாடுகிறார் என்று கூறி திடுக்கிட வைக்கிறார். இத்தனை அமளிதுமளிகளுக்கிடையே கூடிய ஆய்வுக் கமிட்டியோ கண்ணை மூடிக் கொண்ட பூனை போல இது சரியாக புரிந்து கொள்ளப்படாத தொடர்பால் வந்த பிரச்சினை என்று ஒரு பூசணித் தோட்டத்தையே சோற்றுக்குள் மறைக்க முயற்சி செய்கிறது. சரி பழைய கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு வீரர்களிடையே இருக்கும் பழக்கத்தால் அவர்களுக்கு உண்மை தெரிந்திருக்கும், அவர்கள் நமக்கு நடந்ததைத் தெளிவுபடுத்துவார்கள் என்று நினைத்தால் அவர்களோ பெரிய இடத்துச் சமாச்சாரம் என்பது போல கருத்துச் சொல்லத் தயங்கி மென்று முழுங்குகிறார்கள்.

அவரவர்களாக உண்மையைச் சொன்னாலொழிய தள்ளி விட்டாரா? தாங்கிப் பிடித்தாரா ? என கருணாநிதி கைது விவகாரத்தைப் போல் நமக்கு கடைசிவரை உண்மை தெரியப் போவதில்லை. அதற்காக நம்மால் சும்மா இருக்க முடியுமா என்ன? நம்முடைய யூகக் குதிரையைத் தட்டி விட்டால் என்ன நடந்திருக்கலாம், நடந்திருக்கும் என்று அது சொல்லி விட்டுப் போகிறது.

முதலில் ஒரு விஷயம். குழந்தைகள் போல் கங்குலியும் சேப்பலும் போட்டுக்கொண்ட சண்டையை கங்குலியே துவங்கியதாக வைத்துக் கொண்டாலும், இந்திய வீரர்களை "பக்கா புரொபஷனல்களாக" ஆக்குவதற்காகத் தான் சில முன்னாள் வீரர்களின் எச்சரிக்கையையும் மீறி சேப்பலை பயிற்சியாளராக கிரிக்கெட் வாரியம் நியமித்தது. ஆனால் தானே ஒரு "புரொபஷனல்" பயிற்சியாளர் இல்லை என்பதை ஆரம்பத்திலேயே சேப்பல் நிரூபித்திருக்கிறார். மிகை லட்சியம் ( டிஎநசயஅbவைiடிரளநேளள) அல்லது சிலர் சொல்வதைப் போல் மறைமுகத் திட்டங்கள் ( hனைனநn யபநனேய ) இல்லாவிட்டால் அவர் கீழ்க்கண்ட தவறுகளைச் செய்திருக்க முடியாது.
( 1 ) ஒரு கிரிக்கெட் தொடர் போட்டிக்காக ஒரு கேப்டனைத் தேர்வு செய்திருக்கும்போது அந்தத் தொடரின் முதல் ஆட்டத்திலேயே அந்த கேப்டனின் ஆட்டத்தில் கேள்வி எழுப்புவது என்பது அபத்தமான அபத்தம். கேப்டனின் தற்போதைய திறமை மீது அவருக்கு சந்தேகம் இருந்தால் அணித் தேர்வுக்கு முன்னதாக தேர்வுக்குழுவுடன் அதுகுறித்து விவாதித்து அதற்கான வழிவகைகளைக் கண்டிருக்க வேண்டும். இவர் தான் இந்த பயணத்திற்கு கேப்டன் என்று முடிவு செய்யப்பட்ட நொடியிலேயே அந்த சிந்தனை அத்துடன் முடிந்து விட வேண்டும். அதற்குப் பிறகு கொடுத்துள்ள கேப்டனுடன் இணைந்து சிந்தித்து பயணத்தில் வெற்றி பெற முயல வேண்டும். அதை விடுத்து இவர் விரும்பாத ஒருவர் கேப்டனாக இருந்தால் அவரை பாதி பயணத்தில் இவர் நெருக்கடி கொடுத்ததை சரி என்று எடுத்துக் கொண்டால், நாளைக்கே அணியில் தேர்வாளர்கள் சர்ச்சைக்குரிய ஒரு இளம் வீரரைத் தேர்வு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவரைத் தேர்வு செய்தது சேப்பலுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த வீரரிடம் போய் 'உனக்குத் திறமை பத்தாது, வேறு வீரருக்கு வாய்ப்புக் கொடுக்கலாம்' என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பாரா? ஒரு தேர்வுக்குழுவின் பெரும்பான்மையினர் ஒரு பணியாளரை தேர்வு செய்த பின்பு அவர்களில் ஒருவருக்கு அந்தத் தேர்வில் உடன்பாடில்லாமல் அந்தப் பணியாளர் வேலை செய்யும் நேரத்தில் வந்து அவரை அவமானப்படுத்தினால் எப்படி இருக்கும் ? இந்த கேலிக் கூத்தை எந்த தொழில் முறை பயிற்சியாளர் செய்வார்?
(2) இந்த விஷயத்தில் அவர் காட்டிய அவசரத்தை அமெச்சூர் (தொடக்க நிலை) வீரர்கள் கூட பின்பற்ற மாட்டார்கள் என்பது நிச்சயம். தொடரின் ஆரம்பத்திலேயே கங்குலியை தவறாக நடத்தியது, தொடர் முடிந்தும் முடியாமலும் அவசரஅவசரமாக ஒரு இமெயிலை கிரிக்கெட் வாரியத்திற்கு ( ஜர்னலிஸ்டுகளுக்கு ? ) அனுப்பி வைத்தது, அவசர அவசரமாக பிளேயர்களுக்கிடையே பிளவினை வளர்த்தது எல்லாவற்றிலும் அவசரம் காட்டியவருக்கு பதறிய காரியம் சிதறிப் போகும் ( ழயளவந ஆயமநள றுயளவந ) என்கிற பழைய பழமொழி ஞாபகத்திற்கு வராமலா போயிருக்கும் ?

இவையெல்லாம் சேப்பல் நல்லுணர்வோடு தான் செய்திருப்பார் என்று நம்ப முடியாத விதத்தில் அவரது பழைய சில நிகழ்வுகள் இருப்பது தான் யோசிக்க வைக்கிறது ? அவர் அதிக திறமையைப் போலவே அதிக சுயகர்வமும் கொண்டவர் என்பதை பலரும் ஒப்புக் கொள்வது ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம்.

ஏதோ இப்படியெல்லாம் நாம் சொல்வதனால் கங்குலிக்கு நாம் வக்காலத்து வாங்குவதாக அர்த்தமில்லை. ஏனென்றால் கங்குலியின் சமீபத்திய ஆட்டத்திறனுக்கு அவர் குறித்து வரும் நகைச்சுவைத் துணுக்குகளே சான்று. ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் அவர் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல உலகின் அதி பலவீனமான அணியிடம் தான் எடுத்த சதத்தைக் கூறி தன் பலத்தை வெளிக்காட்ட வேண்டிய அவலநிலைக்கு ஆளாகி விட்டார். சரி சேப்பல் சமயம் பார்த்து விளையாடுகிறார், நமது சூழ்நிலை சரியில்லை என்றெல்லாம் உணர்ந்து அப்போது அடக்கி வாசித்து விட்டு இலங்கைக்கு எதிரான போட்டிகளிலோ அல்லது விரைவில் வர இருக்கும் பாகிஸ்தான் பயணத்திலோ வெளுத்து வாங்கிவிட்டு பிறகு சேப்பலின் மோசடி வேலைகளை அம்பலத்திற்கு கொண்டு வந்திருப்பதால் கங்குலி ஜெயித்திருப்பார் என்பதை விட இந்தியாவின் கிரிக்கெட் பிழைத்திருக்கும். ஆனால் இவரோ தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போல தேவையில்லாமல் ஓய்வு அறையில் நடந்த விவகாரங்களை முதலில் பேட்டியைக் கொடுத்து விட்டு கடுமையான நெருக்கடியில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார். இப்போது என்ன ஆயிற்று, இனி அணி சிறப்பாக விளையாடினாலும் படு மோசமாக விளையாடினாலும் சேப்பல் நான் அப்போதே சொன்னேனே என்று சொல்லப் போகிறார், அது மட்டுமல்லாமல் இப்போது எதிரணி வீரர்கள் மட்டுமல்லாமல் நெருக்கடியும் சேர்ந்து கங்குலிக்கு எதிராக விளையாடி அவரின் ஆட்டத்திறனை மேலும் பரிசோதிக்கும் ( இந்த அக்கினிப் பரீட்சையில் அவர் ஜெயித்தால் அப்போது அவரின் அத்தனை செயல்களும் நியாயப்படுத்தப்படும் ), வழக்கமாகவே கங்குலி அவ்வப்போது சர்ச்சைக்குரிய முடிவுகள் எடுப்பது வழக்கம் ( உதாரணம் சச்சினை நடுநிலை ஆட்டக்காரராக்கி முயற்சி செய்தது, முரளி கார்த்திக்கின் மீது நம்பிக்கை கொள்ளாதது ) , ஆனால் வெற்றி பெற்றவரை அவை அதிகமாக விமரிசனத்துள்ளாகவில்லை. அதே முடிவுகள் தோல்வியுற்றால் இனி கடுமையாக விமரிசிக்கப்படும். ஆப்பசைத்த குரங்கைப் போல ஆகி விட்டது கங்குலியின் நிலை.

இவர்கள் இப்படியென்றால் கிரிக்கெட் வாரியம் அதற்கு மேல். அவர்களே குடுமிப்பிடிச் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களையே பஞ்சாயத்து செய்யக் கூப்பிட்டால். அவர்கள் தான் இந்த பிரச்சினை இந்த அளவிற்கு வந்ததற்கே காரணம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். கங்குலிக்கும் சேப்பலுக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் அளவில் இருந்த பிரச்சினையை இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக ஆளுக்கொரு பக்கமாக இருந்து தூண்டி விட்டதால் தான் பிரச்சினை இந்த அளவிற்கே வந்தது என்கிறார்கள். என்ன செய்ய முடியும் இந்த சாபக்கேடு இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டுமல்ல உலகில் பெரும்பாலான அதிலும் குறிப்பாக ஆசிய கிரிக்கெட் வாரியங்களில் ரொம்பவும் சகஜமான நிகழ்வாகி விட்டது.

இந்த பழைய ஆட்டக்காரர்கள். எதற்கப்பா வம்பு என்று கருத்துச் சொல்லாமல் ஒதுங்குகிறார்கள். அவர்களை குற்றம் சொல்ல முடியாது. பிற்காலத்தில் ஏதாவது பதவி கிடைப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பை தாங்களே இழக்க அவர்கள் முட்டாள்களா என்ன ?
மொத்தத்தில் ஒன்று மட்டும் தெளிவாகி விட்டது. இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிலை புலி வாலைப் பிடித்த கதையாகி விட்டது. அது ஏதோ ஒரு ஆசையில் கிரேக் சேப்பலைப் போட்டுவிட்டு, இப்போது அவரைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழிக்கிறது.

எப்படியானாலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதுவரை இதைவிட பெரிய கேலிக் கூத்துகளையெல்லாம் கண்டிருக்கிறார்கள். அதனால் இன்னும் கொஞ்ச நாளில் இதுவும் கடந்து விடும், அடுத்த உலகக் கோப்பைக் கனவுடன் மீண்டும் தூங்கப் போகலாம் வாருங்கள்.

இது சினிமா இல்லை, அரசியல்!

நடிகர்கள் அரசியல்வாதிகள் இடையிலான பனிப்போரில் அடுத்து ஒரு சுற்று முடிவடைந்துள்ளது. தங்கர்பச்சான் பிரச்சினை, குஷ்பு பிரச்சினை என எல்லாமே தனித்தனி பிரச்சினைகள் போலத் தெரிந்தாலும் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதும், அவற்றின் பின்னணி பல ஆண்டுகளுக்குப் பின்னால் இருந்து தொடங்குகிறது என்பதும் பொது நோக்கர்கள் எளிதில் உணரக் கூடியதொரு விஷயமாகும்.

சினிமாக்காரர்கள் மீது பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுக்கு இருந்த வெறுப்பு தான் இந்தப் பகைக்கே பிள்ளையார் சுழி போட்டது. அதிலும் ரஜினிகாந்த் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் திடீர் திடீரென்று தோன்றி இந்தக் கட்சிக்கு வோட்டுப் போடுங்கள் அந்தக் கட்சிக்கு வோட்டுப் போடுங்கள் என்று சொல்வதும் அவருக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும் அவரை கடுங்கோபத்தில் தள்ளியது. இருந்தாலும் மக்கள் அவருடைய கருத்துக்களுக்கு கொஞ்சம் காது கொடுப்பதாகத் தோன்றியவரை கோபத்தை அடக்கிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. ஆனால் கடந்த சில தேர்தல்களில் ரஜினியின் வழவழா கொழகொழா கருத்துக்கள் மக்களிடம் எடுபடாமல் போக இதுதான் சமயம் என்று தனது விளையாட்டைத் துவக்கினார் ராமதாஸ். ரஜினி தன் படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை வைத்து மக்களைக் கெடுப்பதாக மேடைகளில் பேச ஆரம்பித்தார். ( ஏதோ இந்தியாவிலேயே புகை பிடிக்கும் காட்சிகளை ரஜினி தான் துவக்கி வைத்தது போலவும் , இந்தியாவில் மற்ற யாரும் புகை பிடிப்பது போல் நடிப்பதேயில்லை என்பது போலவும்). அநாவசியமாக அரசியல் பிரச்சினைகளுக்குள் நுழைய விரும்பாத ரஜினி அமைதியைக் கடைப்பிடிக்க, அதையே தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டார் ராமதாஸ்.

பாபா படத்தின் பெட்டியைக் கைப்பற்றுவோம் என அமளி செய்ய, அதற்கேற்ப அந்தப் படமும் ஒரு தோல்விப் படமாக அமைய ரஜினிக்கு சோதனை மேல் சோதனையானது. அதற்குப் பிறகு ரஜினி பாராளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் நியாயம் கேட்டு, அதுவும் கூட்டணி அரசியலில் காணாமல் போக நீண்ட சுய பரிசோதனையில் இறங்கி விட்டார் ரஜினி. ரஜினியையே பார்த்தாயிற்று இனி மற்ற நடிகர்களெல்லாம் சாதாரணம் என்று தமிழ்நாட்டின் சிவசேனாவாக பாமகவுக்கு அரிதாரம் பூச முயற்சி செய்தார் ராமதாஸ். கஜேந்திரா படத்தையும் ரிலீஸ் செய்ய விடாமல் பிரச்சினை செய்து, படத்தின் தயாரிப்பாளர் கடைசியாக அந்த படத்தின் ஹீரோ விஜயகாந்தையும் பகைத்துக் கொண்டு ராமதாசுடன் சமரசம் செய்து கொண்டார். இத்துடன் நின்று விடவில்லை, இனிமேல் தான் ஆரம்பம் என்பது போல தமிழைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் விளம்பர அட்டைகளை கிழித்துப் போட, மொத்த சினிமா உலகமும் ‘இது தொடரும் ஆபத்து’ என்பதை உணர்ந்து பூனைக்கு யார் மணி கட்டுவது என யோசிக்க ஆரம்பித்தது.

நான் கட்டுகிறேன் என்று காலம் சொன்னதைப் போல, காட்சிகள் மாற ஆரம்பித்தன. விஜயகாந்த் தன் அரசியல் எண்ணத்தை வெளியிட ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்த கணிப்புகளில் மக்கள் மாற்றத்தை விரும்புவது உறுதிப்படுத்தப்படஎச்சரிக்கையானார் ராமதாஸ். அடுத்து வந்த காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களில் தனிக்கட்சியாக போட்டியிட்ட அதிமுக வெற்றிபெற்றதும், ஏழு கட்சிகள் கூட்டணி தோல்வியுற்றதும் கூட்டணியையே யோசனையில் தள்ளியது. விஜயகாந்த் மாநாட்டுத் தேதியையும், அன்று கட்சி துவங்கப்படும் என்றும் அறிவிக்க ரொம்பவே யோசிக்க ஆரம்பித்தார் ராமதாஸ். மேலும் மேலும் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை வேறு அறிவிக்க கூட்டணியே மாற்று நடவடிக்கைகள் குறித்து யோசிக்கையில் சினிமாக்காரர்களை வேறு எங்கு எதிர்ப்பது. அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். அடுத்து வந்த ரஜினியின் சந்திரமுகி உலக அளவில் சக்கைப்போடு போட, ராமதாஸ் மென்று முழுங்க வேண்டியதாயிற்று. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று கிளம்பி , அன்புமணி ரஜினிக்கு "புகைபிடிக்கும் காட்சிகள் இல்லாமல் படம் எடுத்ததற்காக" நன்றி தெரிவிக்க, "நான் எப்போதுமே நட்பு பாராட்ட விரும்புபவன்" என்று கூறி நமட்டுச் சிரிப்பு சிரித்தார் ரஜினி. அடுத்து விஜயகாந்த் மாநாட்டை எல்லோரும் எதிர்பார்க்க மீடியாக்களும் பேட்டி கணிப்பு என்று பரபரக்க எச்சரிக்கை மணி அடிப்பதை உணர்ந்தார் ராமதாஸ்.

இந்த சூழ்நிலையில் தான் தங்கர்பச்சான் பிரச்சினை வந்தது. "பணத்திற்காக மட்டுமே நடிக்கும் நடிகைகள் விபச்சாரம் செய்வதற்கு ஒப்பானவர்கள்" என்று அவர் சொன்னதாக சர்ச்சை கிளம்பியது. அவர் அந்த விஷயத்தை தான் அப்படிச் சொல்லவில்லை என்று மறுத்தாலும் சில நடிகைகள் இதை உணர்வுப் பிரச்சினையாகக் கொண்டு செல்ல, நடிகர்கள் சங்கமும் தாங்கள் பழிவாங்குவதற்கான சந்தர்ப்பமாக அதை உபயோகப்படுத்திக் கொண்டதாக குற்றம் சாட்டினார் திருமாவளவன்.

பிரச்சினை வேறு திசையில் செல்லத் துவங்குவதை உணர்ந்த தங்கர்பச்சான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டும் அவரை நடிகர் சங்கத்திற்கு அழைத்து எல்லோர் முன்னிலையிலும் அவரை மன்னிப்புக் கேட்க வைத்து அவமானப்படுத்தியது நடிகர் சங்கம். கொதித்துப் போன திருமாவளவன் கோபத்தை பகிரங்கமாக வெளிப்படுத்த அசாதாரண அமைதி காத்தார் ராமதாஸ். அடுத்து வந்த விஜயகாந்த் மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்று, விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவிக்க சூடுபட்ட பூனையானார் ராமதாஸ். ஆனால் அவரது கட்சியினரும் திருமாவளவன் மற்றும் அவரது கட்சியினரும் அப்படி இருக்க விரும்பவில்லை. தங்களுடைய வாய்ப்புக்காகக் காத்திருக்க வகையாக மாட்டிக் கொண்டது குஷ்பு கொடுத்த பேட்டி.

இந்தியா டுடேயில் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் இயல்பாக மேற்கத்திய கலாச்சாரத்திலும் பார்ட்டி கலாச்சாரத்திலும் மூழ்கியுள்ள சில பெண்களைக் கருத்தில் கொண்டு "குறைந்த பட்சம் உடல் நலத்தை கருத்தில் கொண்டாவது இது போன்ற விஷயங்களில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். நோய் தடுப்பு முறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்பது போல் பேச, இது போதாதா நம் கலாச்சாரக் காவலர்களுக்கு? அவரவர் தங்கள் மகளிர் அணிகளைக் கிளப்பி விட பிரச்சினை பூதாகரமாகி நாளொரு கொடும்பாவி எரிப்பும் பொழுதொரு வழக்குமாக மிரண்டு நிற்கிறார் குஷ்பு .

நிர்வாகம்,சினிமா , கிரிக்கெட், மீடியா என அரசியல் எந்த துறையையும் விட்டுவைக்காத ஒரு சூழலில் தங்களின் சுயநலத்திற்காக சில அரசியல்வாதிகள் யாரையும் பலி கொடுக்க தயங்க மாட்டார்கள். அந்தப் பலியாடுகளின் சமீபத்திய உதாரணங்கள் தான் தங்கர்பச்சானும் குஷ்புவும். அப்படிப்பட்ட அரசியல்வாதிகளிடம் எச்சரிக்கை மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பதே சினிமாக்காரர்களுக்கும், சினிமா உலகத்திற்கும் மட்டுமன்றி பொதுமக்களுக்கும் வருங்கால தமிழ் சமுதாயத்திற்கும் நல்லது.