Wednesday, October 12, 2005

இது சினிமா இல்லை, அரசியல்!

நடிகர்கள் அரசியல்வாதிகள் இடையிலான பனிப்போரில் அடுத்து ஒரு சுற்று முடிவடைந்துள்ளது. தங்கர்பச்சான் பிரச்சினை, குஷ்பு பிரச்சினை என எல்லாமே தனித்தனி பிரச்சினைகள் போலத் தெரிந்தாலும் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதும், அவற்றின் பின்னணி பல ஆண்டுகளுக்குப் பின்னால் இருந்து தொடங்குகிறது என்பதும் பொது நோக்கர்கள் எளிதில் உணரக் கூடியதொரு விஷயமாகும்.

சினிமாக்காரர்கள் மீது பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுக்கு இருந்த வெறுப்பு தான் இந்தப் பகைக்கே பிள்ளையார் சுழி போட்டது. அதிலும் ரஜினிகாந்த் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் திடீர் திடீரென்று தோன்றி இந்தக் கட்சிக்கு வோட்டுப் போடுங்கள் அந்தக் கட்சிக்கு வோட்டுப் போடுங்கள் என்று சொல்வதும் அவருக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும் அவரை கடுங்கோபத்தில் தள்ளியது. இருந்தாலும் மக்கள் அவருடைய கருத்துக்களுக்கு கொஞ்சம் காது கொடுப்பதாகத் தோன்றியவரை கோபத்தை அடக்கிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. ஆனால் கடந்த சில தேர்தல்களில் ரஜினியின் வழவழா கொழகொழா கருத்துக்கள் மக்களிடம் எடுபடாமல் போக இதுதான் சமயம் என்று தனது விளையாட்டைத் துவக்கினார் ராமதாஸ். ரஜினி தன் படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை வைத்து மக்களைக் கெடுப்பதாக மேடைகளில் பேச ஆரம்பித்தார். ( ஏதோ இந்தியாவிலேயே புகை பிடிக்கும் காட்சிகளை ரஜினி தான் துவக்கி வைத்தது போலவும் , இந்தியாவில் மற்ற யாரும் புகை பிடிப்பது போல் நடிப்பதேயில்லை என்பது போலவும்). அநாவசியமாக அரசியல் பிரச்சினைகளுக்குள் நுழைய விரும்பாத ரஜினி அமைதியைக் கடைப்பிடிக்க, அதையே தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டார் ராமதாஸ்.

பாபா படத்தின் பெட்டியைக் கைப்பற்றுவோம் என அமளி செய்ய, அதற்கேற்ப அந்தப் படமும் ஒரு தோல்விப் படமாக அமைய ரஜினிக்கு சோதனை மேல் சோதனையானது. அதற்குப் பிறகு ரஜினி பாராளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் நியாயம் கேட்டு, அதுவும் கூட்டணி அரசியலில் காணாமல் போக நீண்ட சுய பரிசோதனையில் இறங்கி விட்டார் ரஜினி. ரஜினியையே பார்த்தாயிற்று இனி மற்ற நடிகர்களெல்லாம் சாதாரணம் என்று தமிழ்நாட்டின் சிவசேனாவாக பாமகவுக்கு அரிதாரம் பூச முயற்சி செய்தார் ராமதாஸ். கஜேந்திரா படத்தையும் ரிலீஸ் செய்ய விடாமல் பிரச்சினை செய்து, படத்தின் தயாரிப்பாளர் கடைசியாக அந்த படத்தின் ஹீரோ விஜயகாந்தையும் பகைத்துக் கொண்டு ராமதாசுடன் சமரசம் செய்து கொண்டார். இத்துடன் நின்று விடவில்லை, இனிமேல் தான் ஆரம்பம் என்பது போல தமிழைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் விளம்பர அட்டைகளை கிழித்துப் போட, மொத்த சினிமா உலகமும் ‘இது தொடரும் ஆபத்து’ என்பதை உணர்ந்து பூனைக்கு யார் மணி கட்டுவது என யோசிக்க ஆரம்பித்தது.

நான் கட்டுகிறேன் என்று காலம் சொன்னதைப் போல, காட்சிகள் மாற ஆரம்பித்தன. விஜயகாந்த் தன் அரசியல் எண்ணத்தை வெளியிட ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்த கணிப்புகளில் மக்கள் மாற்றத்தை விரும்புவது உறுதிப்படுத்தப்படஎச்சரிக்கையானார் ராமதாஸ். அடுத்து வந்த காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களில் தனிக்கட்சியாக போட்டியிட்ட அதிமுக வெற்றிபெற்றதும், ஏழு கட்சிகள் கூட்டணி தோல்வியுற்றதும் கூட்டணியையே யோசனையில் தள்ளியது. விஜயகாந்த் மாநாட்டுத் தேதியையும், அன்று கட்சி துவங்கப்படும் என்றும் அறிவிக்க ரொம்பவே யோசிக்க ஆரம்பித்தார் ராமதாஸ். மேலும் மேலும் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை வேறு அறிவிக்க கூட்டணியே மாற்று நடவடிக்கைகள் குறித்து யோசிக்கையில் சினிமாக்காரர்களை வேறு எங்கு எதிர்ப்பது. அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். அடுத்து வந்த ரஜினியின் சந்திரமுகி உலக அளவில் சக்கைப்போடு போட, ராமதாஸ் மென்று முழுங்க வேண்டியதாயிற்று. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று கிளம்பி , அன்புமணி ரஜினிக்கு "புகைபிடிக்கும் காட்சிகள் இல்லாமல் படம் எடுத்ததற்காக" நன்றி தெரிவிக்க, "நான் எப்போதுமே நட்பு பாராட்ட விரும்புபவன்" என்று கூறி நமட்டுச் சிரிப்பு சிரித்தார் ரஜினி. அடுத்து விஜயகாந்த் மாநாட்டை எல்லோரும் எதிர்பார்க்க மீடியாக்களும் பேட்டி கணிப்பு என்று பரபரக்க எச்சரிக்கை மணி அடிப்பதை உணர்ந்தார் ராமதாஸ்.

இந்த சூழ்நிலையில் தான் தங்கர்பச்சான் பிரச்சினை வந்தது. "பணத்திற்காக மட்டுமே நடிக்கும் நடிகைகள் விபச்சாரம் செய்வதற்கு ஒப்பானவர்கள்" என்று அவர் சொன்னதாக சர்ச்சை கிளம்பியது. அவர் அந்த விஷயத்தை தான் அப்படிச் சொல்லவில்லை என்று மறுத்தாலும் சில நடிகைகள் இதை உணர்வுப் பிரச்சினையாகக் கொண்டு செல்ல, நடிகர்கள் சங்கமும் தாங்கள் பழிவாங்குவதற்கான சந்தர்ப்பமாக அதை உபயோகப்படுத்திக் கொண்டதாக குற்றம் சாட்டினார் திருமாவளவன்.

பிரச்சினை வேறு திசையில் செல்லத் துவங்குவதை உணர்ந்த தங்கர்பச்சான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டும் அவரை நடிகர் சங்கத்திற்கு அழைத்து எல்லோர் முன்னிலையிலும் அவரை மன்னிப்புக் கேட்க வைத்து அவமானப்படுத்தியது நடிகர் சங்கம். கொதித்துப் போன திருமாவளவன் கோபத்தை பகிரங்கமாக வெளிப்படுத்த அசாதாரண அமைதி காத்தார் ராமதாஸ். அடுத்து வந்த விஜயகாந்த் மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்று, விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவிக்க சூடுபட்ட பூனையானார் ராமதாஸ். ஆனால் அவரது கட்சியினரும் திருமாவளவன் மற்றும் அவரது கட்சியினரும் அப்படி இருக்க விரும்பவில்லை. தங்களுடைய வாய்ப்புக்காகக் காத்திருக்க வகையாக மாட்டிக் கொண்டது குஷ்பு கொடுத்த பேட்டி.

இந்தியா டுடேயில் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் இயல்பாக மேற்கத்திய கலாச்சாரத்திலும் பார்ட்டி கலாச்சாரத்திலும் மூழ்கியுள்ள சில பெண்களைக் கருத்தில் கொண்டு "குறைந்த பட்சம் உடல் நலத்தை கருத்தில் கொண்டாவது இது போன்ற விஷயங்களில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். நோய் தடுப்பு முறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்பது போல் பேச, இது போதாதா நம் கலாச்சாரக் காவலர்களுக்கு? அவரவர் தங்கள் மகளிர் அணிகளைக் கிளப்பி விட பிரச்சினை பூதாகரமாகி நாளொரு கொடும்பாவி எரிப்பும் பொழுதொரு வழக்குமாக மிரண்டு நிற்கிறார் குஷ்பு .

நிர்வாகம்,சினிமா , கிரிக்கெட், மீடியா என அரசியல் எந்த துறையையும் விட்டுவைக்காத ஒரு சூழலில் தங்களின் சுயநலத்திற்காக சில அரசியல்வாதிகள் யாரையும் பலி கொடுக்க தயங்க மாட்டார்கள். அந்தப் பலியாடுகளின் சமீபத்திய உதாரணங்கள் தான் தங்கர்பச்சானும் குஷ்புவும். அப்படிப்பட்ட அரசியல்வாதிகளிடம் எச்சரிக்கை மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பதே சினிமாக்காரர்களுக்கும், சினிமா உலகத்திற்கும் மட்டுமன்றி பொதுமக்களுக்கும் வருங்கால தமிழ் சமுதாயத்திற்கும் நல்லது.

1 comment:

Anonymous said...

its a very good post. i like the neutral view in any matter analsyed in this post.