Wednesday, April 05, 2006

லஷ்மி மிட்டல் முயற்சி வெல்லுமா?

அயல் நாடு வாழ் இந்தியரான லஷ்மி மிட்டல் ஆர்ஸலர் நிறுவனத்தை கையகப்படுத்த முயல்வது குறித்த கட்டுரை வெப் உலகத்தில் வெளியாகியுள்ளது. அதனை இங்கே கொடுத்திருக்கிறேன். படித்து விட்டு அபிப்பராயம் சொல்லுங்கள்.
நன்றி ::
வெப் உலகம்

லஷ்மி மிட்டல் முயற்சி வெல்லுமா?

லக்ஸம்பர்கில் இருந்து செயல்படும் இரும்பு எஃகு நிறுவனமான ஆர்ஸலர் நிறுவனத்தை லண்டன் மற்றும் நெதர்லாண்ட்ஸினை தலைமையகமாக கொண்டு செயல்படும் வெளிநாட்டு இந்தியர் லஷ்மி மிட்டலின் (உலக பணக்காரர்கள் வரிசையில் 5வது இடத்தில் இருப்பவர்) நிறுவனம் கையகப்படுத்த முயற்சிக்க ஐரோப்பிய நாடுகளில் இப்போது சர்ச்சை எழுந்திருக்கிறது. உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை இணைத்து கொள்வதோ அல்லது கையகப்படுத்துவதோ அன்றாடம் நிகழும் சாதாரண நிகழ்வாகி விட்டது. இந்த சூழலில் மிட்டலின் இந்த முயற்சிக்கு ஐரோப்பிய நாடுகளில் கடும் எதிர்ப்பு எழுவதன் காரணம் என்ன? மிட்டல் இந்த முயற்சியில் அளவு கடந்த ஆர்வம் காட்டுவது ஏன்? மிட்டலின் முயற்சி வெற்றி பெறுமா?

இந்த துறையின் வித்தியாச அம்சம்:

இரும்பு எஃகு துறை உலகின் முதன்மையான பிளவுபட்ட துறையாகும். மற்ற துறைகளில் எல்லாம் முதல் பெரிய 10 நிறுவனங்கள் 90 சதவீதத்திற்கும் மேல் சந்தை பங்கினை கையில் வைத்திருக்கும் வேளையில் இத்துறையில் மட்டும் முதல் 10 பெரிய கம்பெனிகள் சேர்ந்தாலும் 15 சதவீதத்திற்கும் கீழ் தான் மொத்த சந்தை மதிப்பில் கொண்டுள்ளன. இந்த துறையில் கடந்த பல பத்தாண்டுகளாக தனிநிறுவன வளர்ச்சி , விரிவாக்கம், சந்தை பங்கினை அதிகப்படுத்துதல் என்பதையே நிறுவனங்கள் செய்ய முடியாது இருந்தது. இதன் முக்கிய காரணம் இந்த துறையில் வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு குறைவாக இருந்தது. மிகப்பெரிய நிறுவனங்களும் இல்லை. இதில் மிட்டல் எப்படி உள்ளே வந்தார்?

லஷ்மி மிட்டல் நிறுவனம் :

கல்லூரிக்கு பின் கல்கத்தாவில் தனது தந்தை வைத்திருந்த சிறிய இரும்பு நிறுவனத்திலேயே ஆரம்பத்தில் தனது பணியை துவக்கிய மிட்டல் இந்தியாவில் இரும்பு நிறுவன வளர்ச்சிக்கு நிறைய தடைகள் இருப்பதாக கருதி தனது தந்தையின் ஆதரவுடனேயே 1970களில் இந்தோனேசியாவில் தனது நிறுவனத்தை துவக்கினார். இரும்பு எஃகு உற்பத்தி நிறுவனங்களின் சிதறுண்டு கிடந்த தன்மையை பார்த்து இத்துறையில் வளர்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பிருப்பதை கண்டு கொண்டார்.

சோவியத் ரஷ்யா சிதறுண்டதற்கு பிறகு கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா நாடுகளில் கடனில் தத்தளித்து கொண்டிருந்த இரும்பு ஆலை நிறுவனங்களை 90களில் கையகப்படுத்தினார். நிர்வாக திறமையின்மையால் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க கூட முடியாமல் திண்டாடி கொண்டிருந்த புதிய அரசுகள் சந்தோஷமாக மிட்டல் நிறுவனத்திடம் விற்று விட்டு ஒதுங்கி கொண்டன. மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இந்த விஷயத்தை அவ்வளவாக கண்டு கொள்ளாமல் விட்டு விட்டன. இந்த நிறுவனங்களை கையகப்படுத்தியதின் மூலம் மிட்டல் நிறுவனத்திற்கு கடன் அதிகரித்தது என்பது உண்மை. ஆனால் அந்த பிரச்சினையை உயர்ந்து கொண்டிருந்த இரும்பு எஃகின் விலை, அதிகரித்த உற்பத்தி திறன், குறைவான வட்டி விகிதம் இவற்றை கொண்டு சமாளித்து விட்டார் மிட்டல். இப்போதும் கூட மிட்டல் நிறுவன பங்கு ஒன்றின் புக் வேல்யூவான 14.42 டாலருக்கு 11.44 டாலர் நீண்டகால கடன் இருப்பது குறிப் பிடத்தக்கது.

தற்போது நெதர்லாண்ட்ஸ் மற்றும் லண்டனில் தலைமையகம் இருக்கும் மிட்டல் நிறுவனத்திற்கு கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கரீபியன் என உலகின் அத்தனை பகுதிகளிலும் ஆலை இருக்கிறது. 175000 பேர் உலகமெங்கும் இவரது நிறுவன பணியாளர்கள்.

ஆர்ஸலர் நிறுவனம் :

பிரான்ஸின் யூசினார், லக்ஸம்பர்கின் ஆர்பெட் மற்றும் ஸ்பெயினின் ஏஸ்ரேலியா இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து தான் 10 பில்லியன் டாலர் ஆர்ஸலர் நிறுவனமே உருவாகியது. 2004 வரை இந்த நிறுவனமே உலகின் மிகப்பெரிய இரும்பு உருக்கு நிறுவனமாகவும் இருந்தது. அதற்கு பிறகு இப்போது மிட்டல் நிறுவனம்
முதலிடத்தை பிடிக்க இது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரி கை டாலி ஆசியாவிலும் வடக்கு அமெரிக்காவிலும் விரிவாக்க பணிகளை திட்டமிட்டு வருகிறார்.

இந்த நிறுவன அமைப்பின் முக்கிய அம்சமே ஐரோப்பிய அரசுகளின் பங்கு இந்த நிறுவன நிர்வாகத்தில் இருப்பது தான். அவற்றில் லக்ஸம்பர்க் அரசு அதிக பங்குகளை கொண்டுள்ளது. எனவே தான் இதன் நிர்வாகம் வெறும் வணிக அடிப்படையிலான முடிவுகளை மட்டுமே எடுத்து விட முடியாது. அரசியில் ரீதியாக ஏற்று கொள்ளப்படக் கூடியதாகவும் உள்ளூர் வேலை வாய்ப்பு இழப்பிற்கு காரணமாகி விடாமலும் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதற்கு உள்ளது. மாறாக மிட்டல் நிறுவனமோ லஷ்மி மிட்டல் குடும்பத்தாரிடம் தான் அதிகபட்சமான பங்குகள் உள்ளன.

------------------------------------ மிட்டல் -(ஆர்ஸலர்)
2005 விற்பனை பில்லியனில் ------$28.10-- ($38.84)
ஓராண்டு விற்பனை வளர்ச்சி(%)-- 27 -----(8)
2005நிகர வருவாய் (பில்லியனில்)-- $3.37 --($4.58)
ஓராண்டு நிகர வருவாய் வளர்ச்சி(%)(-28)--(66)
பணியாளர்கள் எண்ணிக்கை 175000-- (96000)
-----------------------------------------------------------

மிட்டலின் முயற்சி :

தற்போது ஆர்ஸலர் நிறுவனத்தின் பங்குகளை கையகப்படுத்தி அந்த நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தனது முயற்சிகளை தொடங்கியுள்ள லஷ்மி மிட்டல் இந்த முயற்சிக்கு 18.6 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளார். இந்த முயற்சி இரண்டு நிறுவன பங்குதாரர்களிடையே பலத்த எதிர்பார்ப்பினையும் ஆதரவினையும் பெற்றுள்ளது. ஜனவரி 26ல் இந்த முயற்சி குறித்து மிட்டல் அறிவித்த தினம் முதல் ஆர்ஸலர் பங்குகளின் மொத்த மதிப்பு பல பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிட்டல் இந்த முயற்சிக்கு ஏன் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்? முதலில் மேற்கு ஐரோப்பாவில் காலூன்ற இது ஒரு அற்புத வாய்ப்பு. அதே போல ஆர்ஸலர் நிறுவனமும் மிட்டல் நிறுவனத்திற்கு சம பருமனுள்ள நிறுவனம் என்பதால் இதனை கையகப்படுத்தும் பட்சத்தில் உலக சந்தையில் 11 ரூ இந்த இணைந்த நிறுவனத்தின் கையில் வரும். மிட்டலின் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய பலமும் ஆர்ஸலரின் மேற்கு ஐரோப்பிய பலமும் ஒருங்கிணையும். மிட்டலின் அமெரிக்க பலமும் ஆர்ஸலரின் லத்தீன் அமெரிக்க பலமும் ஒன்றிணையும்.

சரி ஐரோப்பிய அரசுகள் இதனை ஏன் எதிர்க்க வேண்டும் :

முதலில் இது போன்ற ஒரு முயற்சி அறிவிப்பினை மிட்டல் வெளியிட்டதுமே திடுக்கிட்டு விழித்ததைப் போல எழுந்து கொண்டன பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய அரசுகள். முதலில் மேற்கு ஐரோப்பாவின் இரும்பு எஃகு சந்தை ஒரு இங்கிலாந்து இந்தியரின் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்ற சிந்தனையே அவர்களுக்கு விபரீதமாகப் பட்டது. அதிலும் நிறுவனத்துடன் அது குறித்த பேச்சுவார்த்தை என்ற அறிகுறி கூட இல்லாமல் பங்குதாரர்களிடம் இருந்து பங்குகளை
வாங்க முயற்சித்தது என்பது அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியளித்தது. வணிக ரீதியாக இது ஒரு வழக்கமான நிகழ்வு தான் என்றாலும் ஏற்கனவே அதிகமான வேலை இழப்பால் உள்நாட்டு எதிர்ப்பினை சம்பாதித்து வரும் ஐரோப்பிய அரசுகள் இந்த விஷயத்தில் பலத்த எதிர்ப்பினை சம்பாதிக்க நேரும்.
மற்றொரு பக்கம் ஆர்ஸலர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் மிட்டல் நிறுவனத்துடன் இணைவதில் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறார்கள். போட்டி மிகுந்த இரும்பு எஃகு துறையில் மிட்டல் போன்ற வணிக தலைவரின் உறுதியான தெளிவான சிந்தனைகள் மூலம் தான் நிறுவன வளர்ச்சி அதிகரிக்கும் என்று கருதுகிறார்கள். ஆக நிறுவன பங்குதாரர்களுக்கும் உள்ளூர் கோபத்திற்கும் இடையே அல்லாடுகின்றன ஐரோப்பிய அரசுகள். ஒரு குடும்ப கட்டுப்பாட்டில் இருக்கும் மிட்டல் நிறுவனம் பல அரசுகளும் தொழிற்சங்கங்களும் முக்கிய பங்கு வகிக்கும் ஆர்ஸலர் நிறுவனம் என இரண்டு நிறுவனங்களுக்கும் கலாச்சாரமே வேறுபடுகிறது. இந்த சூழலில் எந்த தொழில் முறையான திட்டமிடலும் இல்லாமல் மேற்கு ஐரோப்பா சந்தையை கட்டுப்படுத்தும் ஒரே குறுகிய நோக்கத்துடன் மட்டும் ஆர்ஸலர் நிறுவன பங்குதாரர்களை மிட்டல் திசை திருப்பி வருவதாக எதிர்க்கும் ஐரோப்பிய அரசுகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த விஷயத்தை தங்களது கவுரவ பிரச்சினையாக தான் இவை பார்க்கின்றன.

நாடுகளின் கருத்து :

மிட்டல் லண்டனில் வசிக்கும் வெளி நாட்டு இந்தியர் என்பதால் இந்தியாவும் இங்கிலாந்தும் மிட்டலது முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. உலகமயமாக்கலின் யதார்த்தத்தை எதிர்ப்பு ஐரோப்பிய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று

இங்கிலாந்து கூறியுள்ளது. இந்த விஷயம் குறித்து இந்திய பிரதமரும் பிரான்ஸ் அதிபர் ஜாக்வஸ் சிராக்குடன் பேசியிருக்கிறார். மிட்டல் ஒரு இங்கிலாந்து இந்தியர் என்பதால் தான் இந்த எதிர்ப்பு என்ற இனவெறி குற்றச்சாட்டினை பலமாக மறுத்துள்ளார் சிராக். ஆர்ஸலர் முதன்மை அதிகாரி டாலியோ, மிட்டல் பங்குகளை வாங்க முற்பட்டதற்கு பதிலாக நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி நிறுவனங்களை இணைக்க முற்பட்டிருக்கலாம் என்று கருத்து கூறியுள்ளார். மிட்டலோ ஒரு இந்திய வணிகராக தனக்கு நேர்ந்த சம்பவங்கள் மற்றவர்களுக்கு நேரும் பட்சத்தில் அது உலகமயமாக்கலுக்கே பின்னடைவு தான் என்று கூறியுள்ளார்.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

உண்மையில் மிட்டலின் முடிவு பல தொழில் கணிப்பு நிபுணர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஏனென்றால் இந்தியாவும் சீனாவும் தான் உலகில் அதிக இரும்பு எஃகு தேவை கொண்டதாக இருந்தன. இதன் காரணமாகவே கடந்த 5 ஆண்டுகளில் எஃகு நிறுவனங்களின் உற்பத்தி விலையும், லாபமும் அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் சுமார் 5000 ஆலைகளை உள் நாட்டில் நிறுவியுள்ள சீனா தனது உள் நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ததோடு அல்லாமல் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உற்பத்தியை பெருக்கி விட்டது. அதன் ஏற்றுமதி அதிகரிக்க அதிகரிக்க உலகின் மற்ற நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.இது போன்ற கடினமான காலங்களில் ஆள் குறைப்பு மற்றும் செலவின குறைப்பு நடவடிக்கைகளின் மூலம் நிறுவனத்தை நிலை நிறுத்தி கொள்ள மிட்டல் நிறுவனத்தால் முடியும்.
ஆனால் பல அரசாங்க, தொழிற்சங்க தலைவர்களை நிர்வாகத்தில் கொண்டுள்ள ஆர்ஸலர் நிர்வாகத்திற்கு இது சுலபமானதல்ல. வேலை இழப்பு இருக்க கூடாது என்ற காரணத்தால் அதிகப்படியான செலவினங்களினால் நிறுவனம் பலத்த நஷ்ட சூழலுக்கு ஆளாகும். நிறுவனத்தை நடத்த இயலாத சூழல் தோன்றும் அந்த நேரத்தில் மிட்டல் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கும் பட்சத்தில் அது சுலபமாகவும் இருந்திருக்கும். ஐரோப்பிய அரசுகளிலும் சாதகமான சூழல் நிலவியிருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
அதே சமயத்தில் ஒரு சிறிய நிறுவனமாக தொடங்கி இன்று ஒரு சாம்ராஜ்யத்திற்கே தலைவராக இருக்கும் மிட்டல் நிச்சயமாக இதன் சாதக பாதகங்களை அலசிய பிறகே இந்த முயற்சி மேற்கொண்டிருப்பார் என்பதையும் இவர்கள் ஒப்பு கொள்கிறார்கள்.


கடந்த சில நாட்களில் அனைத்து தரப்புகளுமே தங்களது நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. ஆர்ஸலர் நிறுவன பங்குதாரர்களிடம் நல்ல பெயரெடுக்கும் முயற்சியை மிட்டல் நிறுவனம் மேற்கொள்ள லஷ்மி மிட்டல் இந்தியா மூலமும் ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலமும் விரைவில் இந்த கையக முயற்சியை முடிக்க அதிரடியாக செயல்பட்டு வருகிறார். ஆர்ஸலர் நிறுவனமோ விழித்து கொண்டு தங்கள் நிர்வாக திறனில் அவநம்பிக்கை கொள்ள வேண்டாம் என்று கூறி பங்குதாரர்களுக்கு அதிக டிவிடென்டுகளை அறிவித்தும், கனடாவின் டொஃபாஸ்கோ நிறுவனத்தை கையகப்படுத்தியும் பிரச்சினையில் சம நிலை கொண்டு வர முயற்சித்து கொண்டுள்ளது. இந்தியாவும் இங்கிலாந்தும் மேற்கு ஐரோப்பிய அரசுகளை அமைதிப்படுத்தும் முயற்சியில் இறங்க அந்த நாடுகள் செய்வதறியாமல் முழிக்கின்றன.

ஆர்ஸலர் நிறுவனத்தை மிட்டல் நிறுவனம் கையகப்படுத்துவது என்பது லஷ்மி மிட்டல் சொல்வதை போல் ‘தவிர்க்க முடியாதது’ என்பது தான் தற்போதைய உலக மயமாக்கல் யதார்த்தம்.

அமெரிக்காவின் ஆறு துறைமுகங்களை துபாயில் இருந்து செயல்படும் ஒரு துறைமுக பராமரிப்பு நிறுவனத்தின் பராமரிப்பில் விடுவதை (இதற்கு புஷ் தனிப்பட்ட ஆதரவு தெரிவித்ததாக சொல்லப்பட்டாலும் கூட) அமெரிக்க அமைச்சரவை சமீபத்தில் நிராகரித்தது என்பதும் அதேபோல் அமெரிக்க எண்ணெய் நிறுவனம் ஒன்றினை சீன அரசு துணை நிறுவனம் ஒன்று கையகப்படுத்தும் முயற்சியையும் உள் நாட்டு எதிர்ப்பை காரணம் காட்டி அமெரிக்கா முறியடித்ததும் நினைவிருக்கலாம். உலகமயமாக்கல் என்கிற காட்டாற்று வெள்ளத்தை கட்டவிழ்த்து விட்ட அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இன்று அதனை மிரட்சியுடன் பார்ப்பதை ‘காலத்தின் விளையாட்டு’ என்பதை தவிர வேறென்ன சொல்ல முடியும்.


வெப் உலகத்தில் இந்த கட்டுரைக்கான இணைப்பு இங்கே :
http://www.webulagam.com/news/parimanangal/0604/01/1060401009_1.htm .

No comments: