Monday, April 06, 2009

72 இலட்சம் கோடியில் என்னென்ன செய்யலாம்?

இதுநாள் வரை இந்திய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வரி ஏய்ப்பு செய்து ஸ்விஸ் வங்கிகளில் சேமித்து வைத்திருக்கும் பதுக்கல் பணம் 72 இலட்சம் கோடியில் இருந்து 92 இலட்சம் கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பீடுகள் கூறுகின்றன. இந்த பணத்தை நாட்டிற்கு கொண்டு வர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கின்றன.

இந்த 72 இலட்சம் கோடியில் என்னென்ன செய்யலாம்?

மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என அனைத்து வகைக் கல்லூரிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வியை இலவசமாக்கலாம். (கல்விக்காக பொருட்களின் மீது விதிக்கப்படும் 2 சதவீத கூடுதல் வரியை நீக்கலாம்.)

நதிகள் இணைப்புத் திட்டத்தை நிதிப் பிரச்சினை இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாய் செயல்படுத்தத் துவங்கலாம்.

சமூக பாதுகாப்பு, அடிப்படை சுகாதார வசதிகள் என்பவை எல்லாம் முன்னேறிய ஏகாதிபத்திய நாடுகளின் மக்களுக்குத் தான் என்றில்லாமல் இங்கும் சீரிய முறையில் அமல்படுத்தலாம்.

இப்படி எந்த திட்டம் என்றாலும் அது முழுமையாக 110 கோடி மக்களையும் திருப்திப்படுத்தாமல் கூட போய் விடலாம். அதனால் திருமங்கலம் தொகுதியில் அரசியல்வாதிகள் செய்தது போல் ரொக்கப் பணமாக இந்திய மக்கள்தொகை முழுமைக்கும் தலைக்கு இவ்வளவு எனப் பிரித்துக் கொடுத்து விடலாம். வாக்குரிமை கொண்டவர்களுக்கு மட்டும் என்று பிரித்தாலே, தலைக்கு ஒரு லட்சம் வரை கிடைக்கும். குறைந்த பட்சம் பணப்புழக்கம் அதிகரித்து, பணவீக்கம் அதிகரிக்கும். (இது தானே இப்போது ரிசர்வ் வங்கியின் தலைவலி). திருமங்கலம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

பாவம் பதுக்கல்வாதிகள். உலகத்தில் பணத்தை எங்கே பதுக்கி வைத்தால் பாதுகாப்பு என்று பார்த்து பார்த்து கோடிகளைக் கொண்டு போய் அயல்நாட்டு வங்கிகளில் குவித்தார்கள். இப்போது ஒபாமா புண்ணியத்தில் அத்தனைக்கும் ஆப்பு.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டிய கதையாக, இத்தனை நாளாக இதனைப் பற்றி மூச்சு விடாத இந்திய அரசியல்வாதிகள், அமெரிக்காவின் கறுப்பு பணத்தை வரி வலைக்குள் கொண்டு வர வரி ஏய்ப்பை தடுக்க ஒபாமா ஸ்விஸ் வங்கிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க, தூக்கத்தில் இருந்து விழித்ததைப் போல இப்போது நமது அரசியல்வாதிகளும் குரல் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

இந்த பணத்தை தேசத்திற்கு கொண்டு வருவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. தேசியவாதி அத்வானியும் அந்த பணத்தை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக மேடை தோறும் முழங்கி காங்கிரசுக்கு தேர்தல் சமயத்தில் நெருக்குதல் அளித்து வருகிறார். ஜமீன்தாரர்கள் கட்சியான காங்கிரசுக்கு தான் நெருக்கடி. பாவம் எத்தனை பெரிய தலைகளுக்கு பக் பக் என்கிறதோ. ஆனாலும் வாக்குவங்கியை விடமுடியுமா. தாங்கள் இந்த கணக்கு விவரங்கள் கோரி சுவிஸ் வங்கிகளிடம் விண்ணப்பம் செய்திருப்பதாகவும், தாங்கள் எதனையும் மறைக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியிருக்கிறார்.

இலங்கை பிரச்சினை போலவே இந்த பிரச்சினையும் தேர்தலுக்கு பின் பல கட்சிகளால் புறந்தள்ளப்படும் சூழ்ச்சி நேரலாம். 

கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்து பிரதிநிதிகளும் இந்த பிரச்சினையில் கவனம் சிதறாமல் வலியுறுத்தினால் மட்டுமே ஊழல் பெருச்சாளிகள் கொண்டு சென்ற பணமூட்டைகளை பத்திரமாய் வீடு கொண்டு வந்து சேர்க்க முடியும். பல்வேறு அரசியல் கட்சிகளுக்குள்ளும் தொழிற்சங்கங்களுக்குள்ளும் சிக்கியிருக்கும் இந்த பிரதிநிதிகள் தங்கள் வர்க்கத்தின் நலன் காக்க ஒன்றுபட்டு போராடினால் தான் உண்மைகள் மட்டுமல்ல உரிமைகளும் மீட்கப்படும். செய்வார்களா?

1 comment:

இராசகுமார் said...

அப்போ அந்த பணம் திரும்ப கிடைக்கும்னு உங்களுக்கு ஒரு எண்ணம் இருக்கா?
ஹும் உங்களை எல்லாம் பாதா எனக்கு பரிதாபமா இருக்கு.
போங்க போயி புள்ள குட்டிகளை படிக்க வைங்க